ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Wednesday 20 March 2013

திருக்குரான்-மென்பொருள்

பிஸ்மில்லாஹ் ஹிர்ரஹ்மான் னிர்ரஹீம்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துலில்லாஹி வபரகாத்துஹு

 
இஸ்லாமியர்களின் புனித நூலான திருக்குரான் பெரும்பாலும் இணையத்தில் தான் படிக்கின்ற மாதிரி இருக்கிறது. அதனால் இணையம் இருப்பின் மட்டுமே பார்த்துக் கொள்ளும் படி இருந்தது. அந்தக்குறையைப் போக்கும் வகையில் குரான் நூலானது தமிழிலும் பயன்படுத்துகிற வகையில் சிறப்பாக மென்பொருள் வடிவத்தில் அமைக்கப் பட்டுள்ளது. இதனால் குரானை உங்கள் கணிணியிலேயே வைத்துப் படிக்கலாம். பயன்படுத்தலாம். Zekr என்ற இந்த மென்பொருள் நேர்த்தியான வடிவமைப்புடன் எளிதாகப் பயன்படுத்தும் படியும் இருக்கிறது. 

இந்த மென்பொருளின் மூலம் குரானை எளிதாகப் படிக்கலாம். சூராக்கள் (அத்தியாயங்கள்), ஆயத்துகள் வழியாக குறிப்பிட்ட வசனத்தைத் தேடலாம். சுராக்கள், ஆயத்துகளை முன்னோக்கி பின்னோக்கி செல்லலாம். குறிப்பிட்ட பக்கங்கள் வழியாகவும் தேடலாம். பிடித்த வசனங்களை புக்மார்க் செய்து கொள்ளலாம். மேலும் அனைத்து வசனங்களையும் ஆடியோ வடிவில் கேட்க முடியும். குரானை பல மொழிகளில் படிக்கவும் முடியும். மேலும் இந்த மென்பொருளை முற்றிலும் தமிழ் உள்பட சில மொழிகளில் பயன்படுத்த முடியும்.

இந்த மென்பொருளை கீழே உள்ள சுட்டியில் சென்று தரவிறக்கவும்.கிளிக் செய்க

இந்த மென்பொருளைப் பயன்படுத்த Java Runtime Environment தேவைப்படும். இல்லாதவர்கள் கீழே சென்று தரவிறக்குங்கள்.கிளிக் செய்க

இந்த மென்பொருளில் இயல்பாக ஆங்கிலம் மற்றும் குறிப்பிட்ட மொழிகளில் குரானைப் படிப்பதாக இருக்கிறது. உங்களுக்கு தமிழ் மற்றும் பல மொழிகள் வேண்டுமானால் கீழே சென்று தரவிறக்க வேண்டும். அதாவது இவையெல்லாம் குரானை Translation செய்து காட்டும்.

தமிழ் மொழிக் கோப்பு - கிளிக் செய்க
பிற மொழிகளுக்கு - கிளிக் செய்க




பின்னர் இந்த மென்பொருளில் Tools->Add->Translation என்பதில் சென்று தரவிறக்கிய கோப்பைத் தேர்வு செய்தால் நீங்கள் தமிழில் குரானைப் படிக்கலாம். View->Layout இல் சென்று Mixed என்று வைத்துக் கொண்டால் மென்பொருளில் உருது மற்றும் தமிழில் குரானை எளிதாகப் படிக்கலாம்.


Tamil User Interface

இதன் இடைமுகத்தையும் தமிழிலிலேயே காணவும் பயன்படுத்தவும் முடியும். இதற்கு Tools மெனுவில் options செல்லவும். அதில் language என்பதில் தமிழைத் தேர்வு செய்தால் தமிழிலேயே இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.

இந்த தகவலை அனைவருக்கும் சேர்க்க வேண்டியது நம் கடமை...அனைவருக்கும் பகிரவும்

நன்றி:mtctonline@gmail.com

Sunday 17 March 2013

மஸ்ஜிதுல் அக்ஸா


மஸ்ஜிதுல் அக்ஸா. இதன் பொருள் ‘ தொலைவிலுள்ள தொழுமிடம்’ என்பதாகும். இந்தப் 
பள்ளி வாயில் முதன் முதலாக நபி யஃகூப் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பின்னர் நபி 
சுலைமான் அவர்களால் ஜின்களின் மூலமாக புனர் நிர்மாணம் செய்யப்பட்டது.

இதைப்பற்றி இறைவன் கூறும் பொழுது ‘ அல்லாஹ் மிகத் தூய்மையானவன். அவன் தன் 
அடியாரை (கஃபாவாகிய) சிறப்புற்ற பள்ளியிலிருந்து வெகு தொலைவிலுள்ள பள்ளிக்கு 
(மஸ்ஜித் அக்ஸாவுக்கு) ஓரிரவில் அழைத்துச் சென்றான்.(ஆல்-குர்ஆன் 17:1)

இங்கு ஓரிரவு மிஃராஜ்-விண்ணேற்றத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அழைத்துச் 
செல்லப்பட்டனர். இங்கிருந்து தான் விண்வெளிப் பயணத்தை மேற்கொண்டனர். துவக்கத்தில் 
18 மாதங்கள் மஸ்ஜிதுந்நபவீயில் மஸ்ஜிதுல் அக்ஸாவை நோக்கியே நபி(ஸல்) அவர்களும், 
முஸ்லிம்களும் தொழுது வந்தனர். அதன் பிறகு 2:144-வது வசனம் அருளப்பட்டதும் கஃபாவை 
முன்னோக்கித் தொழ ஆரம்பித்தனர்.

கி.பி 771-ல் நில அதிர்வால் சேதப்பட்ட பொழுது இதனை அப்பாஸியக் கலீஃபா மன்சூர் புனர் 
நிர்மாணம் செய்தார். சிலுவைப்போர் வீரரதகளின் கையிலிருந்த இதனை ஸுல்தான் 
ஸலாஹுத்தீன் கி.பி 1187-ல் வெற்றி கொண்டார்.

இப்புனிதப்பகுதி (மக்கா, மதீனா எல்லைகளைப் போல்) ‘ஹரம் ஷரீஃப்’ என்று 
அழைக்கப்படுகிறது. இது மக்கா, மதீனாவுக்கு அடுத்த படியாக புனித இடமாகும்.
’இங்குத் தொழப்படும் தொழுகை ஒருவர் தன் வீட்டில் தொழுவதை விட ஐநூறு மடங்கு 
மேலானதாகும்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

Saturday 9 March 2013

அப்சல் குரு - விடை தெரியாத வினாக்கள்......!


என் இனிய வலைத்தமிழ் மக்களே..!


நாட்டின் அமைதிக்காகவும், சட்டத்தை நிலை நிறுத்துவதற்காகவும், ஜனநாயகத்தைக் காப்பதற்காகவும் சமீபத்தில் தூக்கிலிடப்பட்ட அப்சல் குரு என்னும் இந்தியனின் வழக்கில் இருந்த ஓட்டைகளையும், சட்ட விதி மீறல்களையும், முரண்பாடுகளையும் கடந்த 2006-ம் ஆண்டே அவுட்லுக் பத்திரிகையில் பிரபல சமூக சேவகர் அருந்ததிராய் எழுதியிருந்த இந்தக் கட்டுரை மிகச் சரியாக அப்சல் குரு தூக்கிலிடப்பட்ட பின்பே மக்கள் பார்வையில் அதிகமாகப் பட்டிருக்கிறது. நானும் இப்போதுதான் படித்து ஒரு இந்தியனாக இருந்து தொலைப்பதற்காக வெட்கப்பட்டேன்..! வேதனைப்படுகிறேன்..!
ஒரு சாதாரண மனிதன்.. ஆயிரம் சந்தேகங்கள் இருக்கும் சூழலில் அரசுகளாலேயே சாகடிக்கப்படப்பட்டான்.. கடைசியாக, அவனது இறந்த உடல் மீது அவனது குடும்பத்தினருக்குக்கூட உரிமையில்லை என்று சொல்லும் இந்தக் கேவலமான, வெட்கங்கெட்ட ஜனநாயக நாட்டில் வாழ்வது என்பதே ஒரு கொடுமைதான்..! இதில் அருந்ததிராய் எழுப்பியிருக்கும் கேள்விகள் எந்தச் சட்ட விசாரணைக்குள்ளும் வராதவையாக கடைசிவரையிலும் இருப்பதன் மர்மத்தைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை..!
பின்பு அந்தக் கனமான அரசியல் சட்டப் புத்தகத்தில் என்னதான் எழுதிக் கிழித்திருக்கிறார்கள்..? நாளொரு பொழுதில் தினம் தினம் புதுப்புது ஊழல்கள் கிளம்பிக் கொண்டேயிருக்க.. இவைகள் அனைத்தையும் ப்பூ என்று ஊதித் தள்ளிவிட்டு, உண்மையாகவே சாக வேண்டிய இந்தப் பொறம்போக்குகளை கொல்ல வந்தார்கள் என்பதற்காக அவர்களையும் பதிலுக்கு கொன்றுவிட்டு கணக்குக் காட்டவே இப்படியொரு வழக்குகளை ஜோடித்து ஜெயித்திருக்கிறார்கள்..!
உங்களில் எத்தனை பேர் படித்திருப்பீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தாலும் ஒரு ஆதாரப் பதிவாக எனது தளத்திலும் இருக்கட்டுமே என்பதால் இங்கே மறு பதிவு செய்திருக்கிறேன்..!
நன்றிகள் வினவு அண்ணன்களுக்கும், அவுட்லுக் பத்திரிகைக்கும், அருந்ததிராய்க்கும், தமிழாக்கம் செய்த குமார் அவர்களுக்கும்..!
அவுட் லுக். அக்-30, 2006 - தமிழாக்கம்: குமார்



நமக்குத் தெரிந்தது இவ்வளவுதான் :
டிசம்பர் 13, 2001 அன்று, இந்திய நாடாளுமன்றத்தின் குளிர்காலக் கூட்டத்தொடர் நடந்து கொண்டிருந்தது. (ஊழல் விவகாரங்களின் வரிசையில் இன்னும் ஒரு விவகாரத்தில் தேசிய முன்னணி அரசாங்கம் தாக்குதலுக்கு உள்ளாகியிருந்தது). காலை 11.30 மணிக்கு, 5 ஆயுதம் தாங்கிய மனிதர்கள் IED (உருவாக்கப்பட்ட வெடிக் கருவி) பொருத்தப்பட்ட வெள்ளை அம்பாசடர் காரை நாடாளுமன்ற கட்டிடத்தின் நுழைவாயில் வழியாக ஓட்டி வந்தார்கள். அவர்கள் தடுக்கப்பட்ட போது, காரிலிருந்து வெளியில் குதித்து சுட ஆரம்பித்தார்கள். அதைத் தொடர்ந்து நடந்த துப்பாக்கிச் சண்டையில் அனைத்து போராளிகளும்கொல்லப்பட்டார்கள். கூடவே 8 பாதுகாப்புக் காவலர்களும், ஒரு தோட்டக்காரரும் கொல்லப்பட்டார்கள்.
நாடாளுமன்ற கட்டிடத்தை வெடித்துச் சிதற வைக்கும் அளவுக்கும், ஒரு படையணி முழுவதுமான சிப்பாய்களை எதிர்க்கும் அளவுக்கும் வெடி கருவிகளை வைத்திருந்தார்கள் என்று காவல் துறை சொன்னது. வழக்கமான மற்ற பயங்கரவாதிகளைப் போல இல்லாமல், இந்த ஐந்து பேரும் கணிசமான சாட்சியங்களை விட்டுச் சென்றார்கள். ஆயுதங்கள், மொபைல்கள், தொலைபேசி எண்கள், அடையாள அட்டைகள், புகைப்படங்கள், உலர்பழ பொதிகள் மற்றும் ஒரு காதல் கடிதம் கூட இவற்றில் அடங்கும்.
அப்போதைய பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய், இதுதான் வாய்ப்பு என்று, மூன்று மாதங்களுக்கு முன்பு செப்டம்பர் 11ல் அமெரிக்காவில் நடந்த தாக்குதல்களுடன் இந்த நிகழ்ச்சியை ஒப்பிட்டதில் நமக்கு வியப்பு ஏதுமில்லை.
தாக்குதல் நடந்த அடுத்த நாளே, டிசம்பர 14, 2001ம் தேதி, தில்லி காவல் துறையின் சிறப்புப் பிரிவு இந்தச் சதியில் ஈடுபட்டிருந்ததாக சந்தேகிக்கப்படும் பலரை தேடிப் பிடித்து விட்டதாக கூறியது. அடுத்த நாளே, வழக்குக்குத் தீர்வு கண்டு விட்டதாகஅறிவித்தது: இந்தக் கூட்டுத் தாக்குதல் பாகிஸ்தானிலிருந்து இயங்கும் லஷ்கர் எ -தொய்பா, ஜெய்ஷ் மொகமது என்று இரண்டு பயங்கரவாதக் குழுக்களின் கூட்டு நடவடிக்கை என்று போலீஸ் கூறியது. 12 பேர் இந்த சதியில் ஈடுபட்டதாகக் குறிப்பிடப்பட்டார்கள். ஜெய்ஷைச் சேர்ந்த காசி பாபா (வழக்கமான சந்தேக நபர் 1), ஜெய்ஷைச் சேர்ந்த மவுலானா மசூத் அசார் (வழக்கமாக சந்தேகப்பட வேண்டிய நபர் 2), தாரிக் அகமது (ஒரு பாகிஸ்தானி’), கொல்லப்பட்ட ஐந்து பாகிஸ்தானி பயங்கரவாதிகள்’ (அவர்கள் யார் என்று இன்று வரை நமக்குத் தெரியாது) கூடவே எஸ்ஏஆர், ஜீலானி, சவுகத் ஹுசைன் குரு, முகமது அப்சல் ஆகிய மூன்று காஷ்மீர் ஆண்களும், சவுக்கத்தின் மனைவி அப்சான் குருவும். இவர்கள் நான்கு பேரும்தான் கைது செய்யப்பட்டவர்கள்.
தொடர்ந்து வந்த பதற்றமான நாட்களில் நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது. டிசம்பர் 21ஆம் தேதி, பாகிஸ்தானில் இருக்கும் தனது தூதுவரை இந்தியா- திரும்பப் பெற்றதோடு, வான் வழி, ரயில், மற்றும் பேருந்து தொடர்புகளை துண்டித்து, விமானங்கள் பறப்பதை தடை செய்தது. தனது போர் எந்திரத்தை பெரும் அளவில் திரட்டும் நடவடிக்கைகளை ஆரம்பித்து, 5 லட்சத்துக்கும் அதிகமான படைவீரர்களை பாகிஸ்தான் எல்லைக்கு நகர்த்தியது. வெளிநாட்டு தூதரகங்கள் தமது ஊழியர்களையும் குடிமக்களையும் பாதுகாப்பாக வெளியே அனுப்பின. இந்தியாவுக்கு பயணம் செய்யும் பயணிகளுக்கு எச்சரிக்கைகளும், ஆலோசனைகளும் வழங்கப்பட்டன. துணைக்கண்டம் அணு ஆயுதப் போரின் விளிம்புக்கு இட்டுச் செல்லப்பட்டதை உலகம் திகைப்புடன் கவனித்துக் கொண்டிருந்தது. (இதற்கு எல்லாம் இந்திய மக்களின் வரிப்பணமான ரூ.10,000 கோடி செலவானதாக மதிப்பிடப்பட்டது. கலவர முறையில் செய்யப்பட்ட படை திரட்டலின் போது மட்டும் சில நூறு படை வீரர்கள் உயிரிழந்தார்கள்).
கிட்டத்தட்ட மூன்றரை ஆண்டுகளுக்குப் பிறகு ஆகஸ்டு 4, 2005ல் உச்சநீதிமன்றம் இந்த வழக்கில் தனது இறுதித் தீர்ப்பை வழங்கியது. நாடாளுமன்றத் தாக்குதல் ஒரு போர் நடவடிக்கை என்று கருதப்பட வேண்டும் என்ற கருத்தை அது ஏற்றுக் கொண்டது. நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதல் முயற்சி இந்திய அரசாங்கம் உள்ளிட்ட அரசின் இறையாண்மை நலனை மீறுவதாக இருக்கிறது என்பதில் சந்தேகத்துக்கிடமில்லை. கொல்லப்பட்ட பயங்கரவாதிகள் உறுதியான இந்திய எதிர்ப்பு உணர்வால் செலுத்தப்பட்டிருக்கிறார்கள். காரில் ஒட்டப்பட்டிருந்த போலி உள்துறை ஸ்டிக்கரில் (சாட்சியம் PW1/8) இருந்த வாக்கியங்கள் அதை வெளிப்படுத்துகின்றனஎன்று அது சொன்னது. தீவிரமான இந்த தற்கொலைப்படையினரின் செயல்முறை இந்திய அரசாங்கத்துக்கு எதிராக போர் தொடுக்கும் நோக்கத்தை வெளிப்படுத்துகிறதுஎன்று தொடர்ந்து விளக்கியது.
போலி உள்துறை அமைச்சக ஸ்டிக்கரில் எழுதப்பட்டிருந்த உரை இதுதான் :
‘INDIA IS A VERY BAD COUNTRY AND WE HATE INDIA WE WANT TO DESTROY INDIA AND WITH THE GRACE OF GOD WE WILL DO IT GOD IS WITH US AND WE WILL TRY OUR BEST. THIS EDIET WAJPAI AND ADVANI WE WILL KILL THEM. THEY HAVE KILLED MANY INNOCENT PEOPLE AND THEY ARE VERY BAD PERSONS THERE BROTHER BUSH IS ALSO A VERY BAD PERSON HE WILL BE NEXT TARGET HE IS ALSO THE KILLER OF INNOCENT PEOPLE HE HAVE TO DIE AND WE WILL DO IT’.
மிகவும் அடக்கமான சொற்களில் எழுதப்பட்ட அந்த ஸ்டிக்கர் அறிக்கை, நாடாளுமன்றத்திற்குள் வந்த காரின் முன் புற கண்ணாடியில் ஒட்டப்பட்டிருந்தது. (இவ்வளவு எழுதியிருப்பதைப் பார்க்கும் போது ஓட்டுனர் சாலையை எப்படி பார்த்து வண்டி ஓட்டியிருக்க முடியும் என்றுதான் தோன்றுகிறது. அதனால்தான் துணை குடியரசுத் தலைவரின் வாகன வரிசையுடன் மோதினாரோ என்னவோ?)
காவல்துறையின் குற்றப்பத்திரிகை, பொடா (பயங்கரவாத தடுப்பு சட்டம்) சிறப்பு நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. விசாரணை நீதிமன்றம், ஜீலானி, சவுகத் மற்றும் அப்சலுக்கு மரண தண்டனை விதித்தது. அப்சான் குருவுக்கு ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. மேல்முறையீட்டில் உயர்நீதி மன்றம் ஜீலானியும் அப்சானும் குற்றமற்றவர்கள் என்று தீர்ப்பளித்து, சவுகத் மற்றும் அப்சலுக்கான மரண தண்டனையை உறுதி செய்தது. இறுதியாக, உச்ச நீதிமன்றம் குற்றங்கள் தள்ளுபடி செய்யப்பட்டதை உறுதி செய்து, சவுகத்தின் தண்டனையை 10 ஆண்டுகள் கடுங்காவல் சிறை என்று குறைத்தது. ஆனால், அது அப்சலின் தண்டனையை உறுதி செய்ததோடு மட்டுமில்லாமல் அதிகரிக்கவும் செய்தது. அவருக்கு மூன்று ஆயுள் தண்டனைகளும் ஒரு இரட்டை மரண தண்டனையும் விதிக்கப்பட்டன.
உச்ச நீதிமன்றம் அதன் ஆகஸ்டு 4, 2005 தீர்ப்பில், அப்சல் குரு எந்தவொரு பயங்கரவாத குழு அல்லது அமைப்பைச் சேர்ந்தவர் என்பதற்கான ஆதாரம் எதுவுமில்லை என்று தெளிவாகச் சொல்கிறது. ஆனால், அது இப்படியும் சொல்கிறது. பெரும்பாலான சதித்திட்டங்களில், குற்றச் சதியில் பங்கேற்றதற்கான நேரடி சாட்சியம் இருக்க முடியாது. இருப்பினும், குற்றம் சாட்டப்பட்ட அப்சல் கொல்லப்பட்ட தற்கொலைப் படை பயங்கரவாதிகளுடன் ஒத்துழைத்தார் என்பது சூழ்நிலைகளைச் சீர்தூக்கிப் பார்க்கும் போது தெளிவாகிறது’.
ஆகவே, நேரடி சாட்சியம் இல்லை, ஆனால், சூழ்நிலை சாட்சியங்கள் உண்டு.
தீர்ப்பின் சர்ச்சைக்குள்ளான ஒரு பத்தியில், ‘இந்த நிகழ்ச்சி முழு தேசத்தையும் உலுக்கியிருக்கிறது. குற்றவாளிக்கு மரண தண்டனை கொடுக்ப்பட்டால்தான் சமூகத்தின் கூட்டு மனசாட்சி சமாதானம் அடையும். இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு சவாலாக இருந்த இந்த பயங்கரவாதிகள் மற்றும் சதிகாரர்களின் செயலுக்கு பரிகாரம் இந்த துரோகச் செயலில் சதிகாரர் என நிரூபிக்கப்பட்ட நபருக்கு அதிகபட்ச தண்டனையை அளிப்பதாகத்தான் இருக்க முடியும்’. (அழுத்தம் என்னுடையது).
மரண தண்டனை என்னும் சடங்கு ரீதியான கொலையை நியாயப்படுத்துவதற்கு சமூகத்தின் கூட்டு மனசாட்சியைபயன்படுத்துவது லைஞ்ச் சட்டத்தை (ஒரு கும்பல் சட்ட விரோதமாக கொலை செய்வது மொழிக் குறிப்பு) போற்றுவதற்கு சமமானது. இதை நம் மீது சுமத்தியவர்கள் கொலைப்பசி கொண்ட அரசியல்வாதிகளோ, பரபரப்பைத் தேடும் பத்திரிகையாளர்களோ இல்லை (அவர்களும் இதைச் செய்திருக்கிறார்கள்). ஆனால், நாட்டின் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவாக இது வந்தது நடுக்கமூட்டுவதாக இருக்கிறது.
சரணடைந்த போராளியான மனுதாரர் தேசத்துக்கு எதிரான துரோகச் செயல்களை தொடர்ந்து செய்வதில் முனைந்து நிற்கிறார். அவர் சமூகத்துக்கு ஒரு அச்சுறுத்தல். அவரது உயிர் இல்லாமல் போக வேண்டும்என்று அப்சலுக்கு மரண தண்டனை வழங்குவதற்கான காரணங்களை விளக்கும் வகையாக தீர்ப்பு தொடர்ந்து சொல்கிறது.
இந்த பகுதி தவறான வாதத்தையும், இன்றைய காஷ்மீரில் சரணடைந்த போராளியாக இருப்பதைப் பற்றிய அறிவின்மையையும் இணைக்கிறது.
எனவே: முகமது அப்சலின் உயிர் இல்லாமல் போக வேண்டுமா?
அறிவுஜீவிகள், பத்திரிகை ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுவாழ்க்கையினர் அடங்கிய சிறிய, செல்வாக்கு மிகுந்த ஒரு சிறுபான்மையினர் மரண தண்டனையை கொள்கை ரீதியாக எதிர்த்தனர். மரண தண்டனை பயங்கரவாதிகளுக்கு ஒரு மனத்தடையாக இருக்கிறது என்பதற்கு எந்த நடைமுறை ஆதாரமும் இல்லை என்றும் அவர்கள் வாதிடுகிறார்கள். (தற்கொலை மனித வெடி குண்டுகளின் இந்தக் காலத்தில், மரணம் ஒரு முக்கிய கவர்ச்சியாக இருக்கும் போது, அப்படி இல்லைதான்).
கருத்துக் கணிப்புகள், ஆசிரியருக்குக் கடிதம், தொலைக்காட்சி நேரடி ஒளிபரப்பில் பங்கு பெறும் பார்வையாளர்கள் இவர்கள்தான் இந்திய பொதுக்கருத்தின் சரியான அளவை என்று வைத்துக் கொண்டால், லைஞ்ச் கும்பல் மணிக்கு மணி அதிகரித்துக் கொண்டே போகிறது. அறுதிப் பெரும்பான்மை இந்திய குடிமக்கள், அடுத்த சில ஆண்டுகளுக்கு அப்சல் குரு ஒவ்வொரு நாளும், சனி, ஞாயிறு கூட விடுமுறை விடாமல், தூக்கில் இடப்பட வேண்டும் என்று விரும்புவதாகத் தெரிகிறது. எதிர்க்கட்சி தலைவர் எல்.கே. அத்வானி, ஒரு கணமும் தாமதிக்காமல் அவர் உடனடியாக தூக்கிலிடப்பட வேண்டும் என்று அநாகரீகமான அவசரத்தைக் காட்டுகிறார்.
இதற்கிடையில், காஷ்மீரில் பொதுக்கருத்து இதே பெரிய அளவில் உருவாகியிருக்கிறது. கோபமான மக்கள் போராட்டங்கள், அப்சல் தூக்கிலிடப்பட்டால் பின்விளைவுகள் அரசியல் ரீதியாக எப்படி இருக்கும் என்பதை தெளிவாக்குகின்றன. நீதி மறுக்கப்பட்டதை எதிர்த்து சிலர் போராடுகிறார்கள், ஆனால், இந்திய நீதிமன்றங்களிடமிருந்து நியாயம் கிடைக்கும் என்று அவர்கள் எதிர்பார்க்கவில்லை. அவ்வளவு கொடுமைகளுக்கிடையில் வாழ்ந்து அனுபவித்து விட்ட அந்த மக்களுக்கு நீதிமன்றங்கள், மனுக்கள், அல்லது நீதி மீது எந்த நம்பிக்கையும் மிஞ்சியிருக்கவில்லை. இன்னும் சிலர், முகமது அப்சல், மக்பூல் பட்டைப் போல தூக்கு மேடைக்கு கம்பீரமாக நடந்து செல்வதைப் பார்க்க விரும்புகிறார்கள். காஷ்மீரின் விடுதலைப் போராட்டத்திற்காக பெருமை மிகு தியாகியாக மாறுவதை விரும்புகிறார்கள். மொத்தத்தில், பெரும்பான்மை காஷ்மீரிகள் அப்சல் ஆக்கிரமிப்பு சக்தியின் நீதிமன்றங்களில் விசாரிக்கப்படும் ஒரு போர்க்கைதி என்றே கருதப்படுகிறார். (அது சந்தேகத்துக்கிடமில்லாத உண்மை). நிகழ்வுகளின் போக்கை மோப்பம் பிடித்து விட்ட அரசியல் கட்சிகள், காஷ்மீரிலும் சரி, இந்தியாவிலும் சரி, கொலை செய்வதற்காக வட்டமிட ஆரம்பித்து விட்டன.
இந்த பரபரப்புகளுக்கிடையே ஒரு தனி நபராக, உண்மையான மனிதனாக வாழ்வதற்கான உரிமையை அப்சல் விட்டுக் கொடுத்து விட்டது போலத் தோன்றுவது வருத்தப்பட வேண்டிய ஒன்று. தேசியவாதிகள், பிரிவினைவாதிகள், மரணதண்டனை எதிர்ப்பு ஆர்வலர்கள் உள்ளிட்ட ஒவ்வொருவரின் கற்பனைக்கும் அவர் வாகனமாக மாறியிருக்கிறார். அவர் இந்தியாவின் மாபெரும் வில்லனாகவும் காஷ்மீரின் மாபெரும் ஹீரோவாகவும் ஆகி விட்டார். நமது நிபுணர்கள், கொள்கை வகுப்பவர்கள், அமைதி குருக்கள் என்ன சொன்னாலும், இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும், காஷ்மீரில் நடக்கும் போர் எந்த வகையிலும் முடிந்து விடவில்லை என்பதைத்தான் இது நிரூபிக்கிறது.
அச்சம் சூழ்ந்த அரசியல் மயமாக்கப்பட்ட இத்தகைய சூழலில், தலையிட வேண்டிய கட்டம் வந்தது, கடந்து போய் விட்டது என்று விட்டு விடலாம் என்றுதான் தோன்றுகிறது. கடைசியில் பார்க்கும் போது, நீதி விசாரணை 40 மாதங்களுக்கு மேல் நீடித்தது, உச்ச நீதிமன்றம் தனக்கு முன் வைக்கப்பட்ட ஆதாரங்களை பரீசிலித்திருக்கிறது. இரண்டு பேரின் குற்றத்தை உறுதி செய்து, இரண்டு பேரை விடுதலை செய்தது. நிச்சயமாக இதுவே நீதித்துறையின் நடுநிலைமைக்கு சான்றாக இருக்கிறதுதானே? விவாதிப்பதற்கு வேறு என்ன இருக்கிறது? இதையே இன்னொரு கோணத்தில் பார்க்கலாம். அரசுத் தரப்பின் வழக்கு, ஒரு பாதியில் பச்சைத் தவறாகவும் இன்னொரு பாதியில் சிறப்பான வெற்றியாகவும் இருப்பது வியப்பாக இல்லை?
முகமது அப்சல், மக்பூல் பட்டாக இல்லாமல் இருப்பதாலேயே அவரது கதை இவ்வளவு விறுவிறுப்பாக இருக்கிறது. இருப்பினும், அவரது கதை காஷ்மீர் பள்ளத்தாக்கின் வரலாற்றுடன் பிரிக்க முடியாதபடி பிணைந்துள்ளது. இந்தக் கதையின் எல்லைகள், நீதிமன்ற வட்டங்களையும், தன்னைத் தானே வல்லரசாகஅறிவித்துக் கொண்டுள்ள நாட்டின் பாதுகாப்பான மையத்தில் வசிக்கும் மக்களின் உள்ளங்களையும் தாண்டி விரிகின்றன. முகமது அப்சலின் கதை, இயல்பான நீதியுணர்வின் வாதங்களுக்கும் உணர்வுகளுக்கும் அப்பாற்பட்ட சட்டங்கள் நடைமுறையில் இருக்கும் போர் பிரதேசத்தில் ஆரம்பிக்கிறது.
இந்த எல்லாக் காரணங்களையும் கருத்தில் கொண்டு, டிசம்பர் 13 நாடாளுமன்ற தாக்குதல் என்ற வினோதமான, வருந்தத்தக்க, மர்மமான கதையை கவனமாக பரிசீலிக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய மக்களாட்சிஉண்மையில் எப்படி செயல்படுகிறது என்பதைப் பற்றி அது நிறைய நமக்குச் சொல்கிறது. மாபெரும் நிகழ்வுகளை மிகச் சிறு நிகழ்ச்சிகளுடன் அது இணைக்கிறது. காவல் நிலையங்களின் இருள் படிந்த மூலைகளில் நடப்பவற்றையும் குளிர் நிறைந்த பனி படிந்த சொர்க்க பள்ளத்தாக்கின் தெருக்களில் நடந்து கொண்டிருப்பவற்றையும், நாடுகளை அணுஆயுதப் போரின் விளிம்புகளுக்குக் கொண்டு வரும் மனிதநலன்களுக்கு அப்பாற்பட்ட தீய ஆவேசத்தையும் இணைக்கும் பாதைகளை அது காட்டுகிறது. அது எழுப்பும் குறிப்பான கேள்விகளுக்கு தேவை குறிப்பான பதில்கள், தத்துவரீதியான அல்லது விவாதரீதியான பதில்கள் இல்லை. கேள்விக்குரியதாக இருப்பது ஒரு தனிமனிதனின் விதி மட்டுமில்லை.
இந்த ஆண்டு அக்டோபர் 4ம் தேதி, முகமது அப்சலுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையை எதிர்த்து புதுதில்லி ஜந்தர் மந்தரில் கூடிய ஒரு சிறு குழுவில் நானும் இருந்தேன். முகமது அப்சல் ஒரு பயங்கரமான திட்டத்தின் ஒரு சிறு பொம்மைதான் என்று நம்பியதால் நான் அங்கு போயிருந்தேன். சித்தரிக்கப்படுவதைப் போன்று அவர் ஒரு டிராகன் இல்லை, அந்த டிராகனின் காலடிச் சுவடுதான் அவர். காலடிச் சுவடை இல்லாமல் செய்து விட்டால், உண்மையில் டிராகனாக இருந்தது யார் என்பது தெரியாமலேயே போய் விடும். இப்போதைய டிராகனும் வெளிவராது.
அந்த பிற்பகலில் போராட்டக்காரர்களை விட பத்திரிகையாளர்களும், தொலைக்காட்சி நிருபர்களும் அதிகமாக இருந்ததில் வியப்பில்லை. அப்சலின் குட்டிப் பையன் காலிப் மீதுதான் பெரும் கவனம் குவிந்திருந்தது. தந்தை தூக்குமேடைக்கு அனுப்பப்படும் நிலையிலிருக்கும் சிறுபையனிடம் எப்படி பழகுவது என்று புரியாமல், கருணை மனம் படைத்தவர்கள் ஐஸ்கிரீம்களையும், குளிர்பானங்களையும் வாங்கித் திணித்துக் கொண்டிருந்தார்கள். அங்கு கூடியிருந்தவர்களைச் சுற்றிப் பார்த்த போது ஒரு சோகமான உண்மையைக் கவனித்தேன்.
அந்தப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்த, பேச்சாளர்களை அறிமுகம் செய்து அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருந்த குள்ளமான குண்டான மனிதர் தில்லி பல்கலைக் கழகத்தில் அரபி இலக்கியத் துறையின் இளம் விரிவுரையாளர். எஸ்ஏஆர் ஜீலானி. நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் மூன்றாவது குற்றவாளி. தாக்குதல் நடந்த அடுத்த நாள் டிசம்பர் 14, 2001ல் தில்லி காவல்துறையின் சிறப்புப் பிரிவால் அவர் கைது செய்யப்பட்டிருந்தார். காவல்துறை பாதுகாப்பில் கொடூரமாக சித்திரவதை செய்யப்பட்ட போதும், அவரது மனைவி, சிறு குழந்தைகள் மற்றும் சகோதரர் உள்ளிட்ட குடும்பத்தினர் சட்ட விரோதமாக பிடித்து வைக்கப்பட்ட போதும் அவர் செய்யாத குற்றத்தை செய்ததாக ஒப்புக் கொள்ள மறுத்தார். அவரது கைதைத் தொடர்ந்த நாட்களில் செய்தித் தாள்களைப் படித்திருந்தால் இதெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்காது. இல்லாத, கற்பனையான வாக்குமூலங்களைப் பற்றிய விபரங்களை அவை வெளியிட்டன. சதிக்கான இந்திய பகுதியின் கொடூர மூளை ஜீலானி என்று தில்லி காவல்துறை சித்தரித்தது. அதன் கதாசிரியர்கள் ஜீலானிக்கு எதிராக வெறுப்பு நிறைந்த ஒரு பிரச்சார இயக்கத்தை நடத்தினார்கள். அதிதேசியவாத, பரபரப்பு தேடும் ஊடகங்கள் அதை ஊதிப் பெரிதாக்கிக் கொண்டன. குற்ற வழக்கு விசாரணைகளில், நீதிபதிகள், ஊடகச் செய்திகளை கருத்தில் எடுத்துக் கொள்ளக் கூடாது என்று காவல் துறைக்கு நன்றாகவே தெரியும். எனினும், இந்த பயங்கரவாதிகளுக்காகஅவர்கள் உருவாக்கிய ஈவு இரக்கமற்ற சித்திரம் பொதுக் கருத்தை உருவாக்கி வழக்கு விசாரணைக்கு அவர்கள் விரும்பும் சூழலை உருவாக்கும் என்று தெரிந்து வைத்திருந்தார்கள். ஆனால், அவர்களது நடவடிக்கைகள் எவையும் சட்டரீதியான பரீசிலனைக்கு உட்படப் போவதில்லை.
முன்னணி பத்திரிகைகளில் வெளியான கேவலமான, வெளிப்படையான பொய்களில் சில கீழே:
வழக்கு முடிவுக்கு வந்தது: தாக்குதலின் பின்னணியில் ஜெய்ஷ்’,
தி இந்துஸ்தான் டைம்ஸ், டிச 15, 2001: நீத்தா சர்மா மற்றும் அருண் ஜோஷி.
ஜாகிர் உசைன் கல்லூரி(மாலை)யின் அரபி பேராசிரியரை சிறப்புப் பிரிவு காவலர்கள் கைது செய்தார்கள். போராளிகள் தமது செல்போனிலிருந்து அவரது தொலைபேசியை அழைத்தது நிரூபணமாகியிருக்கிறது’. அதே நாளிதழில் இன்னொரு செய்தி: தாக்குதலுக்கு முன்னதாக பயங்கரவாதிகள் அவருடன் பேசினார்கள். தாக்குதலுக்குப் பிறகு பேராசிரியர் பாகிஸ்தானுக்கு தொலைபேசினார்’.
தில்லி பல்கலை ஆசிரியர் பயங்கரவாத திட்டத்தின் மையம்
தி டைம்ஸ் ஆப் இந்தியா, டிச 17, 2001.
நாடாளுமன்றத்தின் மீது டிசம்பர் 13 அன்று நடத்தப்பட்ட தாக்குதல் ஜெய்ஷ் முகமது மற்றும் லஷ்கர் தொய்பா பயங்கரவாத குழுக்களின் கூட்டு நடவடிக்கையாகும். அதில் தில்லி பல்கலைக் கழக ஆசிரியர் சையத் ஏஆர் ஜீலானி ஒரு முக்கிய ஒருங்கிணைப்பாளர் என்று தில்லி காவல்துறை ஆணையாளர் அஜய்ராஜ் ஷர்மா ஞாயிற்றுக் கிழமை சொன்னார்’.
பல்கலை தாதா தற்கொலைப்படைக்கு வழிகாட்டினார்
தி ஹிந்து, டிச 17, 2001: தேவேஷ் கே பாண்டே
விசாரணையின் போது, ஜீலானி, ‘தற்கொலைதாக்குதல் திட்டமிடப்பட்ட நாளிலிருந்தே சதியைப் பற்றி அவருக்குத் தெரிந்தததாக சொன்னார்.
தாதா ஓய்வு நேரத்தில் பயங்கரவாதத்தில் உரை நடத்தினார்
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 17, 2001: சுதிர்தோ பட்ரனோபிஸ்.
அவர் மாலையில் கல்லூரியில் அரபி இலக்கியம் கற்றுக் கொடுத்தார். ஓய்வு நேரத்தில் தனது வீட்டில் அல்லது கைது செய்யப்பட்ட இன்னொரு குற்றம் சாட்டப்பட்டவரான சவுகத் ஹூசைனின் வீட்டில் மூடிய கதவுகளுக்குப் பின்பு பயங்கரவாதத்தில் பாடங்கள் நடத்தினார் என்பது விசாரணைகளில் தெரிய வந்தது’.
பேராசிரியரின் நடவடிக்கைகள்
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 17, 2001.
சமீபத்தில் ஜீலானி மேற்கு தில்லியில் 22 லட்ச ரூபாய்க்கு ஒரு வீட்டை வாங்கினார். இப்படி ஒரு புதையல் அவருக்கு எப்படி கிடைத்தது என்று தில்லி காவல் துறை விசாரித்து வருகிறது’.
அலிகர் சே இங்கிலாந்து தக் சாட்ரோன் மே ஆதங்க்வாத் கே பீஜ் போ ரஹா ஜீலானி
(அலிகரிலிருந்து இங்கிலாந்து வரை ஜீலானி பயங்கரவாதத்தின் விதைகளை விதைத்தார் ) ராஷ்ட்ரிய சகாரா, டிச 18, 2001: சுஜித் தாகூர்
மொழிபெயர்ப்பு: ‘…தகவல் தருபவர்கள் மற்றும் புலன்விசாரணை துறைகள் சேகரித்த விபரங்களின் படி, அவர் ஜெய்ஷ் முகமது அமைப்பின் உளவாளியாக நீண்ட காலம் செயல்பட்டதாக ஜீலானி சொல்லியிருந்தார். ஜீலானியின் பேச்சு வன்மை, பணி முறை, சரியான திட்டமிடல் இவற்றைக் கருத்தில் கொண்டு அவரிடம் கருத்துரீதியான பயங்கரவாதத்தை பரப்பும் பொறுப்பை 2000ம் ஆண்டில் ஜெய்ஷ் முகமது ஒப்படைத்தது.
பயங்கரவாதி என கருதப்படுபவர் பாகிஸ்தான் தூதரகத்துக்கு அடிக்கடி போகின்றவர்’.
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், டிச 21, 2011: ஸ்வாதி சதுர்வேதி
விசாரணையின் போது, தான் அடிக்கடி பாகிஸ்தானுக்கு தொலைபேசியதாகவும், ஜெய்ஷ் முகமது இயக்க போராளிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் ஒத்துக் கொண்டார்ஜெய்ஷ் உறுப்பினர்களில் சிலர் பணம் கொடுத்து தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பயன்படுத்துவதற்காக இரண்டு அடுக்கு வீடுகளை வாங்குமாறு சொன்னார்கள் என்று தெரிவித்தார்’.
இந்த வார நாயகன்
சண்டே டைம்ஸ் ஆப் இந்தியா, டிச 23, 2001:
ஒரு செல்பேசிதான் அவருக்கு உலை வைத்தது. தில்லி பல்கலைக்கழகத்தின் சையத் ஏஆர் ஜீலானிதான் டிசம்பர் 13 வழக்கில் முதலில் கைது செய்யப்பட்டவர். பயங்கரவாதத்தின் வேர்கள் எவ்வளவு தூரம் எவ்வளவு ஆழமாக பரவியிருக்கின்றன என்பதை இந்த திடுக்கிட வைக்கும் தகவல் வெளிப்படுத்துகிறது…’
ஜீ டிவி எல்லாவற்றையும் தூக்கிச் சாப்பிட்டு விட்டது.
காவல்துறை குற்றப்பத்திரிகை அடிப்படையிலான உண்மை’ (முரண் சொற்றொடர் என்றுதானே தோன்றுகிறது?) என்று சொல்லி டிசம்பர் 13 என்ற ஒரு ஆவணநாடகத்தை தயாரித்தது. இந்தப் படம் பிரதமர் வாஜ்பாயிக்கும் உள்துறை அமைச்சர் எல்கே அத்வானிக்கும் தனியாக திரையிட்டுக் காட்டப்பட்டது. இரண்டு பேருமே படத்தை பாராட்டினார்கள். அவர்களது பாராட்டு ஊடகங்கள் மூலம் பரவலாக வெளியிடப்பட்டது
இந்த குறும்படத்தை திரையிடுவதை தடை செய்ய வேண்டும் என்ற மனுவை உச்சநீதிமன்றம் நிராகரித்தது. நீதிபதிகள், ஊடகங்களால் பாதிக்கப்படுவதில்லை என்று காரணம் சொல்லப்பட்டிருந்தது. (நீதிபதிகள் ஊடக செய்திகளால் பாதிக்கப்படா விட்டாலும், சமூகத்தின் கூட்டு மனசாட்சி பாதிக்கப்படலாம் என்பதை உச்சநீதி மன்றம் ஏற்றுக் கொள்ளுமா?) ஜீலானி, அப்சல், மற்றும் சவுகத்துக்கு விசாரணை நீதிமன்றம் தூக்கு தண்டனை விதிப்பதற்கு சில நாட்களுக்கு முன்பு டிசம்பர் 13 ஜீ டிவியின் தேசிய ஓடையில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பானது. மொத்தத்தில் ஜீலானி 18 மாதங்கள் சிறையில் கழித்தார். அவற்றில் பெரும்பகுதி தனிமைச் சிறையில் கழித்தார்.
உயர் நீதிமன்றம் அவரையும் அப்சான் குருவையும் குற்றமற்றவர்கள் என்று தீர்மானித்த பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். (கைது செய்யப்படும் போது கர்ப்பமாயிருந்த அப்சான் சிறையில் குழந்தை பெற்றார். அந்த அனுபவம் அவரை உடைத்து விட்டது. அவர் இப்போது கடுமையான மனநோய் பாதிப்பில் இருக்கிறார்). உச்சநீதி மன்றம் இந்த விடுதலையை உறுதி செய்தது. ஜீலானியை நாடாளுமன்ற தாக்குதல் அல்லது ஏதாவது ஒரு பயங்கரவாத அமைப்புடன் இணைக்கும் எந்த சாட்சியத்தையும் அது ஏற்றுக் கொள்ளவில்லை.
எந்த ஒரு செய்தித்தாளோ பத்திரிகையாளரோ தொலைக்காட்சி ஓடையோ தமது பொய்களுக்காக ஜீலானியிடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ளவில்லை.
ஆனால் எஸ்ஏஆர் ஜீலானிக்கு அத்தோடு தொல்லைகள் விட்டு விடவில்லை. அவர் விடுவிக்கப்பட்ட பிறகு சிறப்பு பிரிவின் கையில் மிஞ்சி இருந்தது சூத்திரதாரிஇல்லாத ஒரு கதைக்கரு மட்டும்தான். இது எப்படி ஒரு விவகாரமாக மாறியது என்று பார்ப்போம். முக்கியமாக, ஜீலானி இப்போது சுதந்திரமாக உலாவுகிறார். ஊடகங்களை அணுகவும், வழக்கறிஞர்களுடன் விவாதிக்கவும், தனது கெட்ட பெயரை சரிப்படுத்திக் கொள்ளவும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்திருக்கிறது.
உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடந்து கொண்டிருந்த போது ஒரு நாள், பிப்ரவரி 8, 2005 அன்று மாலையில் ஜீலானி வழக்கறிஞரின் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தார். ஒரு மர்ம மனிதன் இருட்டிலிருந்து வெளிப்பட்டு அவரை நோக்கி 5 குண்டுகளை சுட்டான். அதிசயமாக, அவர் பிழைத்துக் கொண்டார். இந்தக் கதையில் நம்ப முடியாத புதிய திருப்பமாக இது இருந்தது. அவருக்குத் தெரிந்தவற்றைப் பற்றி அல்லது அவர் என்ன சொல்லி விடுவாரோ என்று யாருக்கோ பயம் இருந்திருக்கிறது. காவல் துறையினர் இதைப் பற்றிய விசாரணைக்கு முன்னிலை கொடுத்து நடத்துவார்கள் என்று எதிர்பார்த்திருப்பீர்கள். நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் புதிய கோணங்களுக்கு இது இட்டுச் செல்லும் என்ற நோக்கத்தில் அதை செய்திருக்க வேண்டும். மாறாக, ஜீலானியின் மீதான கொலைத்தாக்குதல் விசாரணையில் அவரையே குற்றவாளி போல நடத்தியது சிறப்புப் பிரிவு. அவரது கணினியை பறிமுதல் செய்து காரையும் எடுத்துக் கொண்டு போய் விட்டார்கள். மருத்துவமனைக்கு வெளியில் நூற்றுக்கணக்கான சமூக ஆர்வலர்கள் கூடி தாக்குதல் பற்றி விசாரணை நடத்தும் படி கோரினார்கள். அத்தகைய விசாரணையில் சிறப்புப் பிரிவின் செயல்பாடும் பரிசீலனைக்கு வரும். (எதிர்பார்த்தபடியே, அது நடக்கவே இல்லை. ஒரு ஆண்டுக்குப் பிறகும் அதைப் பற்றி விசாரணை நடத்துவதில் யாரும் ஆர்வம் காட்டவில்லை. விசித்திரம்!)
கடைசியில் அந்தக் கொடுமையான அனுபவத்தைக் கடந்து வந்த எஸ்ஏஆர் ஜீலானி இங்கே ஜந்தர் மந்தரில் பொது இடத்தில் நின்று முகமது அப்சலுக்கு மரண தண்டனை கொடுக்கப்பட்டது சரியில்லை என்று பிரச்சாரம் செய்கிறார். எந்தத் தொல்லையும் இல்லாமல் வீட்டில் அமைதியாக இருந்திருக்கலாம். அமைதியான முறையில் வெளியான அவரது தைரியம் என்னை மிகவும் பாதித்தது.
எஸ் ஆ ஆர் ஜீலானிக்கு அப்பால், நெருக்கியடித்துக் கொண்டிருக்கும் பத்திரிகையாளர்கள், புகைப்படக் காரர்களுக்கு நடுவில் இன்னொரு ஜீலானி எலுமிச்சை நிற டி சட்டையில் யாரும் கவனித்து விடக் கூடாது என்ற கூச்சத்துடன் கையில் ஒலிப்பதிவுக் கருவியுடன் நின்று கொண்டிருந்தார். இப்திகார் ஜீலானி. அவரும் சிறைக்குப் போயிருந்தார். ஜூன் 9, 2002 அன்று கைது செய்யப்பட்டு போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார். அப்போது அவர் ஜம்முவில் இருந்து இயங்கும் காஷ்மீர் டைம்ஸ் நாளிதழில் நிருபராக இருந்தார். அரசாங்க ரகசியங்கள் சட்டத்தின் கீழ் அவர் மீது குற்றம் சாட்டப்பட்டது. இந்தியக் கட்டுப்பாட்டில் இருக்கும் காஷ்மீரில்இந்திய படைகளின் நகர்வுகளைப் பற்றிய காலாவதி ஆன தகவல்களை அவர் வைத்திருந்தார் என்று குற்றம் சாட்டப்பட்டது. (இந்த தகவல் பாகிஸ்தானிய ஆராய்ச்சி நிலையம் ஒன்றினால் இணையத்தில் வெளியிடப்பட்ட அறிக்கையில் இருந்ததும், யார் வேண்டுமானாலும் அதை தகவிறக்கிக் கொள்ள முடியும் என்பதும் பின்னர் தெரிய வந்தது). இப்திகார் ஜீலானியின் கணினி பறிமுதல் செய்யப்பட்டது. ஐபி அதிகாரிகள் அவரது ஹார்ட் டிரைவை குடைந்து, தகவிறக்கப்பட்ட கோப்பில் புகுந்து இந்தியக் கட்டுப்பாட்டு காஷ்மீர்என்ற சொற்களை ஜம்மு கஷ்மீர்என்று மாற்றினார்கள். அப்போதுதான் அது இந்திய ஆவணம் போல இருக்கும், கூடவே தகவலுக்கு மட்டும் பகிர்ந்து கொள்வதற்கு இல்லை’, என்ற சொற்களையும் சேர்த்து உள்துறை அமைச்சகத்திலிருந்து கடத்தி வரப்பட்ட ஆவணம் போன்ற தோற்றத்தை உருவாக்கினார்கள். இது பற்றி இப்திகார் ஜீலானியின் வழக்கறிஞர் பல முறை விளக்கம் கேட்டும் கட்டுரையின் நகல் அதனிடம் கொடுக்கப்பட்டிருந்தும் ராணுவ உளவுத் துறையின் தலைமை இயக்ககம் ஆறு மாதம் வரை விளக்கம் அளிக்க மறுத்தது.
சிறப்புப் பிரிவு சொன்ன கொடூரமான பொய்கள் நாளிதழ்களில் பணிவுடன் வெளியிடப்பட்டன. சொல்லப்பட்ட பொய்களில் சில:
ஹூரியத் தீவிரவாதி சையத் ஷா ஜீலானியின் 35 வயது மருமகன் இப்திகார் ஜீலானி, தான் ஒரு பாகிஸ்தான் உளவு நிறுவனத்தின் ஊழியர் என்று ஒரு மாநகர நீதிமன்றத்தில் ஒத்துக் கொண்டதாக நம்பப்படுகிறது’ –
தி ஹிந்துஸ்தான் டைம்ஸ், ஜூன் 11, 2002: நீத்தா ஷர்மா
இப்திகார் ஜீலானிதான் ஹிஜ்புல் முஜாஹிதீனின் சையத் சலாஹூதீனின் தொடர்பாளர் இந்திய உளவு நிறுவனங்களின் நடவடிக்கைகள் பற்றிய விபரங்களை இப்திகார் சலாஹூதீனுக்கு கொடுப்பது வழக்கம் என்று விசாரணையில் தெரிய வந்தது. அவர் தனது உண்மையான நோக்கங்களை தனது பத்திரிகையாளர் போர்வைக்குப் பின் மறைத்துக் கொண்டதால், அவரது முகமூடியை விலக்கி உண்மையை அறிய பல ஆண்டுகள் பிடித்தன என்று நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன’.- தி பயனீர், பிரமோத் குமார் சிங்
ஜீலானி கே தமாத் கே கர் ஆய்கர் சாப்போன் மேம் பெஹிசாப் சம்பத்தி வா சமாவாய்தான்ஷெயில் தஸ்தாவேஜ் பர்மாத்
(ஜீலானியின் மருமகன் வீட்டிலிருந்து வருமான வரி ரெய்டின் போது பெரும் அளவிலான செல்வங்களும், ரகசிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டன) ஹிந்துஸ்தான், ஜூன் 10, 2002
அவர் வீட்டிலிருந்து 3,450 ரூபாய்தான் கைப்பற்றப்பட்டது என்று காவல்துறையின் குற்றப்பத்திரிகை பதிவு செய்திருப்பதைப் பற்றி யாருக்கும் கவலையில்லை.
இதற்கிடையில், அவருக்கு மூன்று படுக்கையறை கொண்ட பிளாட் சொந்தமாக இருப்பதாகவும், மறைக்கப்பட்ட 22 லட்ச ரூபாய் வருமானம் இருப்பதாகவும், 70 லட்சம் ரூபாய் வருமான வரி ஏய்ப்பு செய்ததாகவும், அவரும் அவரது மனைவியும் கைது செய்யப்படுவதை தவிர்க்க தலைமறைவாகி விட்டார்கள் என்றும் மற்ற செய்திகள் வெளியாகின.
ஆனால், அவர் கைது செய்யப்பட்டிருந்துது என்னவோ உண்மை. சிறையில் இப்திகார் ஜீலானி அடிக்கப்பட்டு, அவமானப்படுத்தப்பட்டார். கழிவறையை தனது சட்டையால் துடைக்க வைத்து விட்டு, அதே சட்டையை பல நாட்கள் அணிய வைக்கப்பட்டதைப் பற்றி சிறையில் எனது நாட்கள்என்ற புத்தகத்தில் சொல்கிறார். ஆறு மாத நீதிமன்ற வாதங்கள், அவருடன் பணி புரிபவர்களின் முயற்சிகளுக்குப் பிறகு, அவருக்கு எதிரான வழக்கு தொடர்ந்து நடந்தால் பெரிய அவமானத்துக்கு உள்ளாக நேரிடும் என்று தெளிவான பிறகு அவர் விடுவிக்கப்பட்டார்.
அவரும் இப்போது இங்கே வந்திருக்கிறார். ஒரு சுதந்திர மனிதனாக, ஒரு பத்திரிகையாளராக ஜந்தர் மந்தரில் நிகழ்வைப் பற்றி எழுத வந்திருக்கிறார். எஸ்ஏஆர் ஜீலானி, இப்திகார் ஜீலானி, முகமது அப்சல் மூன்று பேரும் ஒரே நேரத்தில் திகார் சிறையில் இருந்தார்கள் என்பது எனக்கு உறைத்தது. (இன்னும் பல டசன் காஷ்மீரிகளும் அவர்களுடன் இருந்தார்கள். அவர்களது கதைகளெல்லாம் நமக்குத் தெரியாமலேயே போய் விடலாம்)
எஸ்ஏஆர் ஜீலானி, இப்திகார் ஜீலானி இவர்களின் மீதான வழக்குகள் இந்திய நீதித் துறையின் நேர்மையை வெளிப்படுத்துவதாக இருக்கிறது என்றும், தனது தவறுகளை தானே திருத்திக் கொள்ளும் அதன் திறனையும் காட்டுகிறது என்றும் அதன் நம்பகத்தன்மையை குறைக்கவில்லை என்றும் ஒருவர் சொல்லலாம். அது ஓரளவுக்குத்தான் உண்மை.
இப்திகார் ஜீலானியும், எஸ்ஏஆர் ஜீலானியும் இரண்டு பேருமே தில்லியைச் சேர்ந்த காஷ்மீரிகள். போராட்ட குணமுடைய நடுத்தர வர்க்க நண்பர்கள், பத்திரிகையாளர்கள், பல்கலைக் கழக ஆசிரியர்கள் என்று அவர்களுக்கு நன்கு தெரிந்தவர்கள் தேவைப்படும் நேரத்தில் உதவிக்கு திரண்டு வந்தார்கள். எஸ்ஏஆர் ஜீலானியின் வழக்கறிஞர் நந்திதா ஹஸ்கர் அகில இந்திய எஸ்ஏஆர் ஜீலானி பாதுகாப்பு குழு ஒன்றை உருவாக்கினார். அதில் நானும் ஒரு உறுப்பினர். ஜீலானிக்கு ஆதரவாக வரும்படி ஆர்வலர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் பத்திரிகையாளர்களும் பரப்புரை செய்தார்கள். புகழ்பெற்ற வழக்கறிஞர்களான ராம்ஜெத்மலானி, கேஜி கண்ணபிரான், விருந்தா குரோவர் ஆகியோர் அவருக்காக வாதாடினார்கள். அவர்கள் வழக்கின் உண்மை நிலையை தோலுரித்துக் காட்டினார்கள் உருவாக்கப்பட்ட சாட்சியங்களின் அடிப்படையில் ஏற்படுத்தப்பட்ட ஊகங்கள், கருத்துக்கள், பச்சைப் பொய்கள் இவற்றின் தொகுப்புதான் வழக்கு என்பதை நிறுவினார்கள்.
ஆமாம், நீதித் துறையில் நியாயம் இருக்கிறது. ஆனால், அது நீதித் துறையின் இருட்டு அறைகளுக்குள் மறைந்து கொண்டிருக்கும் ஒரு பயந்த சுபாவமுள்ள விலங்கு. அது எப்போதாவதுதான் தன்னை வெளிப்படுத்திக் கொள்கிறது. பெரிய வழக்கறிஞர்களின் குழுக்களால்தான் அதை தாஜா செய்து வெளியில் வரச் செய்து செயல்பட வைக்க முடிகிறது. இதுதான் பத்திரிகையாளர்களின் மொழியில் பிரம்ம பிரயத்தனம் என்று சொல்லப்படுவது. அப்படி ஒரு வலிமை முகமது அப்சலின் தரப்பில் வாதாட இருக்கவில்லை.
கைது செய்யப்பட்ட நாளிலிருந்து 5 மாதங்களுக்குப் பிறகு காவல்துறை குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்டது வரை அவருக்கு சட்ட பாதுகாப்போ, ஆலோசனையோ கிடைக்கவில்லை. உயர் பாதுகாப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். பெரிய வழக்கறிஞர்களோ, பாதுகாப்புக் குழுக்களோ, பிரச்சாரங்களோ இந்தியாவிலும் சரி காஷ்மீரிலும் சரி நடக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்ட நான்கு பேரில் அவர்தான் மிக பலவீனமானவர். அவர் மீதான வழக்கு ஜீலானி மீதான வழக்கை விட சிக்கலானது. குறிப்பாக, இந்தக் கால கட்டத்தில் அப்சலின் தம்பி ஹிலால் காஷ்மீரில் சிறப்பு நடவடிக்கை குழுவினரால் பிடித்து வைக்கப்பட்டிருந்தார். குற்றப்பத்திரிகை பதிவு செய்யப்பட்ட பிறகு அவர் விடுவிக்கப்பட்டார். (இந்த வழக்கின் விபரங்கள் அனைத்தும் வெளி வரும் போதுதான் புதிரின் இந்த பகுதி என்னவென்று புரிய வரும்).
புலன் விசாரணை அதிகாரியான காவல் துறை உதவி ஆணையர் ரஜ்பீர் சிங், டிசம்பர் 20, 2011 அன்று சட்ட விரோதமான நடவடிக்கையாக ஒரு பத்திரிகையாளர் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். அவரால் என்கவுண்டரில்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளின்எண்ணிக்கையை போற்றும் விதமாக தில்லியின் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்என்று செல்லமாக அழைக்கப்படுபவர் அவர். பத்திரிகையாளர்களின் முன்பு முகமது அப்சல் வாக்குமூலம் கொடுக்க வைக்கப்பட்டார். அப்சல் ஏற்கனவே காவல்துறையிடம் குற்றத்தை ஒத்துக் கொண்டதாக காவல் துறை துணை ஆணையர் அசோக் சாந்த் கூறினார். இதுவும் ஒரு பொய் என்று பின்னர் தெரிய வந்தது. காவல் துறையிடம் அப்சல் முறையாக வாக்குமூலம் அளித்தது அடுத்த நாள்தான் நடந்தது. (அதற்குப் பிறகும் அவர் சித்திரவதையின் அச்சுறுத்தலுடன் காவல் துறையின் பாதுகாப்பில் வைக்கப்பட்டிருந்தார். இதுவும் சட்டப்படி தவறான நடைமுறை). அவரது பத்திரிகையாளர் வாக்குமூலத்தில்நாடாளுமன்ற தாக்குதல் வழக்கில் தன்னைத் தானே முழுக்க முழுக்க தொடர்பு படுத்திக் கொண்டார் அப்சல்.
இந்த ஊடக வாக்குமூலத்தின்நடுவில் ஒரு மர்மமான நிகழ்ச்சி நடந்தது. நேரடியான ஒரு கேள்விக்கு விடையாக, ஜீலானிக்கும் நாடாளுமன்ற தாக்குதலுக்கும் எந்த தொடர்பும் இல்லை, அவர் முற்றிலும் நிரபராதி என்று அப்சல் தெளிவாகச் சொன்னார். இந்த இடத்தில் உதவி ஆணையர் ரஜ்பீர் சிங் குரலை உயர்த்தி அவரைக் கடிந்து மவுனமாக்கி விட்டு, அப்சலின் வாக்குமூலத்தில் இந்தப் பகுதியை வெளியிடக் கூடாது என்று பத்திரிகையாளர்களைக் கேட்டுக் கொண்டார். அதற்கு அடி பணிந்தார்கள் பத்திரிகையாளர்கள்! இந்த நிகழ்ச்சி மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் வெளியில் வந்தது. ஆஜ் தக் தொலைக்காட்சி இந்த வாக்குமூலத்தை ஹம்லே கே சவ் தின்’ (தாக்குதலின் நூறு நாட்கள்) என்ற நிகழ்ச்சியில் மறு ஒளிபரப்பினார்கள். இந்த பகுதி எப்படியோ தப்பி வெளி வந்து விட்டிருந்தது. இதற்கிடையில் சட்டமோ, புலன் விசாரணை நடைமுறையோ தெரிந்திராத பொது மக்களைப் பொறுத்த வரை அப்சலின் வெளிப்படையான வாக்குமூலம் அவரது குற்றத்தை உறுதி செய்திருந்தது. சமூகத்தின் கூட்டு மனசாட்சியின் தீர்ப்புஎன்னவாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இருக்க வேண்டியதில்லை.
அப்சலின் வழக்கறிஞர் ஒரு முறை கூட சிறைக்குப் போய் அவரது கட்சிக்காரரின் கருத்துக்களை கேட்டுக் கொள்ளவில்லை. அப்சலுக்கு ஆதரவாக ஒரு சாட்சியத்தைக் கூட அவர் அழைக்கவில்லை. அரசுத் தரப்பு சாட்சிகளை குறுக்கு விசாரணை செய்யவே இல்லை.
ஊடகவாக்குமூலத்துக்கு அடுத்த நாள், அப்சலிடமிருந்து அதிகாரபூர்வவாக்குமூலம் கறக்கப்பட்டது. கச்சிதமாக வடிவமைக்கப்பட்ட, உயர் தர ஆங்கிலத்தில் சரளமாக போகும் இந்த வாக்குமூலம் துணை ஆணையர் அசோக் சாந்திடம் சொல்லப்பட்டது. துணை ஆணையர் சொன்னது படி அவர் சொல்லிக் கொண்டே போனார், நான் எழுதிக் கொண்டே இருந்தேன்’. இந்த வாக்குமூலம் சீலிடப்பட்ட உறையில் நீதிபதியிடம் கொடுக்கப்பட்டது. இந்த வாக்குமூலத்தில், அரசுத் தரப்பின் அடிப்படையாக ஆகி விட்டிருந்த அப்சல் ஒரு பிரமாதமான திரைக்கதையை அளிக்கிறார். காசி பாபாவையும் மவுலானா மசூத் அசாரையும் தாரிக் என்பவரையும், இறந்து போன 5 பயங்கரவாதிகளையும், அவர்களது ஆயுதங்கள், கருவிகள், வெடிமருந்துகள், உள்துறை அமைச்சக அட்டைகள், மடிக்கணிகள், போலி அடையாள அட்டைகள் போன்றவற்றையும் இந்தக் கதை திறமையுடன் இணைக்கிறது. எந்த இடத்திலிருந்து எத்தனை கிலோ வெடிமருந்து வாங்கினார், வெடிகுண்டு செய்வதற்காக அவை எந்த விகிதத்தில் கலக்கப்பட்டன, எத்தனை தடவை அவரது மொபைலில் அழைப்புகள் வந்தன என்ற கணக்குகளை துல்லியமாக சொல்கிறார் அப்சல். (இதற்குள், முற்றிலும் மனம் மாறி ஜீலானியையும் சதியில் முழுமையாக சேர்த்துக் கொள்கிறார் அப்சல்).
வாக்குமூலத்தின்ஒவ்வொரு குறிப்பும் காவல்துறை ஏற்கனவே திரட்டியிருந்த சாட்சியங்களுடன் கச்சிதமாக பொருந்தி வந்தன. அப்சலின் வாக்குமூல அறிக்கை, காவல்துறை ஏற்கனவே பத்திரிகைகளுக்கு பல நாட்களுக்கு முன்பே தெரிவித்திருந்த தகவல்களுடன் கச்சிதமாக பொருந்தின. சிந்தரெல்லாவின் பாதம் கண்ணாடி செருப்பில் பொருந்தியது போல. (இது ஒரு திரைப்படமாக இருந்தால், தனது தேவைக்கு ஏற்ப காட்சிகளை அமைத்துக் கொண்ட ஒரு திரைக்கதை என்று சொல்லலாம். பார்க்கப்போனால், அது ஒரு திரைப்படமாக எடுக்கப்பட்டது என்று இப்போது நமக்குத் தெரியும.................

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR