ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Tuesday 19 May 2015

உங்களுக்குப் பிரச்சினையா?

உங்களுக்குப் பிரச்சினையா?-இதை அவசியம் படியுங்கள்👌👌👌👇

அன்பார்ந்த சகோதரர் சகோதிரிகளே! அஸ்ஸலாமு அலைக்கும் வராஹ்..,

பல வருடங்களுக்கு முன்பு ரீடர்ஸ் டைஜஸ்டில் ஒரு கட்டுரை படித்தேன். அமெரிக்க கப்பற்படையில் மிகப் பெரிய பதவி வகித்து ஓய்வு பெற்ற ஒருவர் "நான் படித்த மிகப்பெரிய பாடம்" என்ற தலைப்பில் அவர் வாழ்க்கையில் கற்ற பாடத்தைப் பற்றி எழுதி இருந்த கட்டுரை அது. 

அவர் கப்பற்படையில் சிறிய பதவியில் இருந்த காலம் அது. நடுக்கடலில் இருந்த ஒரு கப்பலில் ஏதோ சிரமமான வேலை அவருக்கு ஒதுக்கப்பட்டிருந்தது. வேலைப் பளு அதிகம் இருந்த ஒரு நாள் வேறு சில கூடுதல் பணியும் அவர் தலையில் விழ அவருக்கு கோபம் தாளவில்லை. நேராக தன் உயரதிகாரியான கப்பலின் கேப்டனிடம் சென்று கோபத்தில் கத்தினார். "முதலிலேயே என் பணிக்கு உதவியாளரை தரவில்லை. இப்போது இது போல் கூடுதல் வேலை வேறு தருகிறீர்கள். எனக்கு பிரச்சினைக்கு மேல் பிரச்சினை(problem) தருகிறீர்கள்." என்கிற ரீதியில் சுமார் கால் மணி நேரம் விடாமல் பொரிந்து தள்ளினார். அவர் பேசியதில் பிரச்சினை என்ற சொல் பல முறை உபயோகப்படுத்தப்பட்டது.

எல்லாவற்றையும் பொறுமையாகக் கேட்ட கப்பலின் வயதான கேப்டன் அமைதியாகச் சொன்னார். "நீ பேசும் போது பிரச்சினை என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தினாய். பிரச்சினை (problem) என்றால் என்ன என்று உனக்குத் தெரியுமா? உனக்கு முதுகுத் தண்டு முறிந்து போய் படுத்த படுக்கையாய் இருக்கிறாய். அது குணமாக வருடக்கணக்காகும் என்றால் அது பிரச்சினை. உன் வீடு எரிந்து போய் இருக்கின்ற எல்லாவற்றையும் இழந்து நீ நடுத்தெருவில் நின்றால் அது பிரச்சினை.... ஆண்டாண்டு காலம் முயன்றால் மட்டுமே சரி செய்ய முடியும் அல்லது சரி செய்யவே முடியாது என்கிற வகையில் வருவது மட்டுமே அது பிரச்சினை. இது போன்ற பிரச்சினைகள் மனிதனின் வாழ்க்கையில் ஓரிரண்டு வரலாம். வராமலும் இருக்கலாம்". 

"மற்றபடி நீ பிரச்சினை என்ற பெயரில் சொல்கின்ற எல்லாமே அசௌகரியங்கள்(inconveniences). இது போன்ற அசௌகரியங்கள் வாழ்க்கையில் நிறைய வரும். அந்தந்த சமயத்தில் இவை பெரிதாகத் தோன்றும். ஆனால் மணிக் கணக்கிலோ நாட்கணக்கிலோ இவை சமாளிக்கப்பட்டு மறக்கப்படக் கூடியவை. பின்னாளில் யோசித்துப் பார்த்தால் அற்ப விஷயமாகத் தோன்றும். இப்போது ஆத்திரப்படும் உனக்கே ஆறு மாதம் கழித்து நினைத்துப் பார்க்கையில் இது அவ்வளவு பெரிய விஷயமாய் தோன்றாது."

"நான் சொல்வதை நன்றாக நினைவில் வைத்துக் கொள். நமது வாழ்க்கை முழுவதும் எல்லாக் கட்டங்களிலும் இது போன்ற அசௌகரியங்கள் நிறையவே இருக்கும். இதற்கெல்லாம் பிரச்சினை என்ற பெயரிட்டு வாழ்க்கையைப் பார்த்தால் நீ என்றுமே மகிழ்ச்சியாய் இருக்க முடியாது!!!!"

அந்த வார்த்தைகளைக் கேட்ட பிறகு எல்லாவற்றையும் ஒரு புதிய கண்ணோட்டத்துடன் பார்க்கத் துவங்கியதாய் அந்த அதிகாரி அந்தக் கட்டுரையில் பின்னாளில் எழுதினார். "அவர் சொன்னது மிகப்பெரிய பாடமாக எனக்கு இருந்தது. அன்றிலிருந்து நான் எனக்கு சிக்கலை ஏற்படுத்தும் சூழ்நிலைகள் வரும் போதெல்லாம் அது உண்மையான பிரச்சினையா, இல்லை அப்போதைய அசௌகரியமா என்று என்னையே கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். நம் வாழ்க்கையில் அசௌகரியங்களைத் தான் அதிகம் சந்திக்கிறோம் என்றும் உண்மையில் அவை அவ்வளவு பெரிய விஷயங்கள் அல்ல என்றும் புரிய ஆரம்பித்தது. கோபம், வருத்தம் எல்லாம் குறைய ஆரம்பித்து பொறுமையும், அமைதியும் என்னில் பெருக ஆரம்பித்தது"

அந்தக் கட்டுரை எனக்கும் பெரிய விழிப்புணர்வை படித்த அன்று ஏற்படுத்தியது. அன்றிலிருந்து அசௌகரியமா, பிரச்சினையா என்று ஒவ்வொரு கஷ்டமான சூழ்நிலைகளில் நானும் என்னைக் கேட்டுக் கொள்ள ஆரம்பித்தேன். சரியான பெயரில் அணுகும் போதே அதை சமாளிப்பது எளிதாகிறது. அசௌகரியத்தின் சக்தி எல்லாம் அந்தந்த நேரத்திற்குத் தான். நிதானம் இழக்காமல் இருந்தால் தூசைத் தட்டுவது போல் அதைத் தட்டிக் களைய முடியும். அப்படி முடியாததை அந்த நேரத்தில் சற்றுப் பொறுமையாக தாக்குப் பிடித்தால் அந்தக் கட்டத்தை சுலபமாக கடக்க முடியும். அந்தக் கேப்டன் சொன்னது போல வாழ்க்கையில் நாம் பிரச்சினையாகக் கருதுவதில் பெரும்பாலானவை அசௌகரியங்களே.

நம்மில் எத்தனை பேர் அசௌகரியங்களை பூதக்கண்ணாடி மூலம் பார்த்து அதற்குப் பிரச்சினை என்று பெயரிட்டு தேவைக்கும் அதிகமாக கொந்தளித்து, நிஜமாகவே பிரச்சினை ஆக்கி, மற்றவர்கள் மன அமைதியையும், நம் மன அமைதியையும் இழந்து அல்லல் படுகிறோம். பல சமயங்களில் நாம் அப்படிப்பட்ட 'பிரச்சினை'யைக் கைவிடுவது எப்போதென்றால் அடுத்த 'பிரச்சினை' ஒன்று வரும் போது தான்.

நீங்களும் நிதானமாக யோசியுங்கள்- உங்கள் பிரச்சினை உண்மையில் பிரச்சினை தானா? இல்லை இப்போதைய அசௌகரியமா? இப்போதைய அசௌகரியம் என்றால் அப்படி உணரும் போதே மன உளைச்சல் தானாகக் குறையக் காண்பீர்கள். அதை சரி செய்யப் பாருங்கள். அல்லது அலட்சியப்படுத்துங்கள். அதை சிறிது காலம் தாக்குப் பிடியுங்கள். அப்படிச் செய்தால் அவை சீக்கிரமாகவே விலகுவதைக் காண்பீர்கள். அவற்றிற்கு நீங்கள் தரும் நேரமும், கவனமும், சக்தி விரயமும் குறையும் போது உண்மையான ஓரிரு பிரச்சினைகளுக்கோ, தாங்கள் செய்ய வேண்டிய முக்கிய காரியங்களுக்கோ அந்த நேரத்தையும், அந்த கவனத்தையும், அந்த சக்தியையும் நீங்கள் தர முடியும். பிரச்சினைகள் இருந்தால் தீர்க்கவும், சாதனைகள் புரியவும் இந்த சிறிய பாகுபாடும், பக்குவமும் நிறையவே உங்களுக்கு உதவி புரியும்.என்ன சகோதரர்களே படித்தை உங்கள் சகோதர்க்கு பகிருங்கள் !!!

Friday 1 May 2015

அரசு செலவில் ஜப்பானுக்கு செல்லும் தமிழக மாணவர்

ழைய ஆட்டோ டியூப்பில் உபயோகமான அறிவியல் சாதனத்தைக் கண்டுபிடித்த மாணவர், அரசு செலவில் ஜப்பானுக்கு அழைத்துச் செல்லப்படுகிறார்.

அறிவியல் தொழில்நுட்பத்தில் முன்னோடியாகத் திகழும் ஜப்பான், மற்ற ஆசிய நாடுகளின் வளர்ச்சியில் பங்கெடுக்க வைக்கும் விதமாக ஜப்பான் - ஆசிய இளையோர் அறிவியல் பரிமாற்றத் திட்டத்தை (சுகுரா) செயல்படுத்தி வருகிறது. இத்திட்டத்தில் இந்தியா, சீனா, கொரியா, சிங்கப்பூர், தாய்லாந்து, இந்தோனேசியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட 15 நாடுகள் இணைக்கப்பட்டுள்ளன.

இந்த நாடுகளில் இருந்து தேர்வு செய்யப்படும் இளைஞர்கள் ஜப்பானில் உள்ள தொழிற்சாலைகள், அறிவியல் தொழில்நுட்ப மையங்கள் மற்றும் கல்வி நிலை யங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவர். இந்த ஆண்டு, இந்தியா முழுவதும் இருந்து மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதில் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே உள்ள அய்யூரைச் சேர்ந்த அபுபக்கர் சித்திக்கும் ஒருவர். இவருடைய தந்தை அம்ஜத் இபுராகீம் ஆட்டோ ஓட்டுநர்.

தற்போது 11ஆம் வகுப்பு முடித்துள்ள சித்திக்கிடம், இந்த வாய்ப்பு கிடைத்தது குறித்து கேட்டோம்.

“எங்கள் ஊரில் உள்ள நடுநிலைப் பள்ளியில் படித்தபோதே, அறிவியல் பாடத்தில் எனக்கு அதிக ஈடுபாடு இருப்பதை ஆசிரியை செல்வராணி உணர்ந்தார். எனவே, என்னை அறிவியல் கண்காட்சிகளில் பங்கேற்க வைத்தார். மத்திய அரசின் அறிவியல் தொழில் நுட்பத்துறை சார்பில் ‘இன்ஸ்பேர்’ விருதுக்கான போட்டி 2009ஆம் ஆண்டு மாவட்ட அளவில் நடைபெற்றது. அதில், நான் உருவாக்கிய எளிய முறையில் எடை அறியும் கருவியைப் பார்வைக்கு வைத்திருந்தேன். பயன்படாத பழைய ஆட்டோ டியூப், குளுக்கோஸ் டியூப் மற்றும் நீளத்தை அளக்கும் இஞ்ச் டேப் ஆகியவற்றைப் பயன்படுத்தி அதைச் செய்திருந்தேன். அது மாவட்ட அளவில் முதல் பரிசை வென்றது.

2010ஆம் ஆண்டு மாநில அளவிலான போட்டியிலும் முதலிடம் பிடித்தேன். இடையிடையே எனது கண்டுபிடிப்பை மேம்படுத்திக் கொண்டே வந்ததால், 2011இல் தேசிய அளவிலான போட்டியிலும் முதல் பரிசு கிடைத்தது. 2013ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியுடன் விருந்தில் கலந்து கொள்ளும் அரிய வாய்ப்பை அறிவியல் தொழில்நுட்பத்துறை வழங்கியது.

அதைத் தொடர்ந்து, ஜப்பான் செல்லும் 50 பேர் குழுவிலும் என்னைத் தேர்வு செய்துள்ளனர். இதில் நான், திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த விக்னேஷ், யுகவேந்தன் ஆகிய 3 பேரும் தமிழர்கள். நான் படித்த அரசுப் பள்ளியும், ஆசிரியை செல்வராணி, தலைமை ஆசிரியர் அருள்முருகன் ஆகியோரும்தான் எனக்கு இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம்.

தற்போது நான் படிக்கும் மதுரை பிரிட்டோ பள்ளி தலைமை ஆசிரியர் அமல்ராஜின் ஒத்துழைப்பு இல்லாவிட்டால், தொடர்ந்து போட்டிகளில் பங்கேற்றிருக்க முடியாது.

வருகிற மே 7-ம் தேதி டெல்லியில் இருந்து ஜப்பான் செல்லவுள்ளோம். அங்குள்ள விண்வெளி ஆய்வு மையம், அறிவியல் அருங்காட்சியகம் உள்ளிட்ட இடங்களைப் பார்வையிடுவதோடு, நோபல் விஞ்ஞானிகளையும் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

எதிர்காலத்தில் விண்வெளி விஞ்ஞானியாக வேண்டும் என்பதே எனது லட்சியம். அதற்கு இந்தப் பயணம் உதவும் என்று நினைக்கிறேன்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.

வசதி இல்லாத குடும்பம் என்பதால், அபுபக்கர் சித்திக் இந்தக் கோடை விடுமுறையில் தம்முடைய அண்ணன்கள் சையது அபுதாகீர், சையது அலாவுதீன் ஆகியோருடன் எலெக்ட்ரிக் வேலை செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR