ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Saturday 30 January 2016

சிந்தனைக்கு..!

🍁கல்வி🍁

🔅வணக்கமில்லா கல்வி🔅
🌹நாம் சிந்திக்க வேண்டும் அல்லாஹ் குர்ஆனின் முதல் வசனத்தை கல்வியின் சம்மந்தமாக ஏன் இறக்க வேண்டும்❓

🍁அல்லாஹ் நாடுவது நம்மிடம் கல்வின் மூலம் வணக்கம் வர வேண்டும்.

🍁இன்றைய காலகட்டத்தில் பலர் பல டிகிரி ,பல முன்னேற்றத்தில் இருக்கிறார்கள் இவ்வுலக கல்வியால்.

ஆனால்!!

🍁தனது பெற்றோர்களுக்கு கூட மகனால் ஜனாஸா தொழுகையில் என்ன ஒதுவது என்று கூட தெரியவில்லை (ஜனஸாவில் ஓதும் துஆக்களும் தெரிவதில்லை)

🍁அதற்கு யார் காரணம் என சிந்தித்து பார்த்தால் பெற்றோர்கள் தான் என்பதில் அணுஅளவும் சந்தேகம் இல்லை.

🍁இன்று பார்க்கின்றோம் நம் குழந்தைகள் கல்வியை கற்பதற்காக கல்வி கூடங்களுக்கு செல்கின்றனர்.

🍁ஆனால் கல்வி கூடங்களில் கல்வி நிலையங்களில்

🔺தொழுகை இல்லை

🔺மார்க்கம் இல்லை

🔺இஸ்லாம் இல்லை

🍁தன் பிள்ளைகளை காலை ஃபஜருடைய நேரத்தில் பெற்றோர்கள் எழுப்புகிறார்கள் எதற்கு தொழுகைக்கு அனுப்பவா இல்லை கல்வி கூடங்களுக்கு போக தன் பிள்ளைகளை தயார் செய்வதற்கு .

🍁அடுத்து ளுஹருடைய நேரத்தையும் அஸருடைய நேரத்தையும் கல்வி நிலையங்களிலே பிள்ளைகளுக்கு கழிந்து விடும்.

🍁மஃரிபும் , இஷாவும் டியூசன் அல்லது விளையாட்டு அல்லது ஊர் சுத்துவது அல்லது வெட்டி கதை பேசுவதற்கு ஆகிய செயல்களில் கழிந்து விடும்.

👆🏼இப்படி தொழுகையை விடக்கூடிய சமூகத்தை கல்வியை கொடுக்கிறோம் என்ற பெயரிலே அழித்து கொண்டு இருக்கிறோம் அல்லாஹ் பாதுகாத்தவரை தவிர.

🔆 பெற்றோர்களே

🍁வணக்கமில்லாத கல்வியை கற்று கொண்டு உங்கள் பிள்ளைகள் எதை சாதிப்பார்கள் படைத்த இறைவனின் சமூகத்தில்❓

🍁மார்க்கத்தை கற்று கொடுக்காத நீங்கள் வேறு எதை கற்று கொடுத்தாலும் மறுமையில் அல்லாஹ்வின் தண்டனையில் இருந்து எப்படி தப்புவீர்கள்❓தப்பவும் முடியாது.

🔺ஹோம் வோர்க் எழுதினாயா❓

🔺பள்ளி பாடம் படித்தாயா❓  என்று கேட்கும் பெற்றோர்கள்

🔺தொழுதாயா?

🔺குர்ஆன் ஒதினாயா❓   

🔺மதரஸாவிற்க்கு சென்றாயா❓

🔺என்று பல பெற்றோர்கள் கேட்பது கிடையாது

🍁தமது பிள்ளைகளுக்கு
10ம் வகுப்பு, 12 ம் வகுப்பில் நல்ல மார்க், இன்ஜினியர், டாக்டர் ஆவது தான் லட்சியம் னு சொல்லி கொடுக்கிறோம்.

🍁ஆனால் அவர்களிடம் மார்க்கத்தை சொல்லுறோமா❓

🍁பிறகு எப்படி நமது பிள்ளைகளுக்கு மார்க்கம் தெரியும் ஸாலிஹான பிள்ளைகளாக எப்படி வளரும்.நாம்.சிந்திக்க வேண்டாமா❓

☝🏼அல்லாஹ் கூறுவதை பாருங்கள் 👇🏼

📓இன்னும், ஜின்களையும், மனிதர்களையும் அவர்கள் என்னை வணங்குவதற்காகவேயன்றி நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56

பழனிபாபா: விதையாய்_விழுந்தவர் ! !

1988 ஆம் ஆண்டு...
அமெரிக்காவிலுள்ள பிலடெல்பியா பெல்லோஷிப் பல்கலைக்கழகத்தின் டெல்டா அரங்கு நிரம்பி வழிந்தது.

கறுப்பர், வெள்ளையர், ஆண்கள், பெண்கள், மாணவ-மாணவியர் என ஆயிரக்கணக்கானோர் திரண்டிருந்த பெருங்கூட்டத்திற்கு நடுவே கம்பீரமாக எழுந்து நின்று உரையாற்றினார், அந்த இளம் தமிழர்.

சுமார் 13 மணி நேரம் அவர் ஆற்றிய தொடர் சொற்பொழிவில் அமெரிக்கர்கள் சொக்கிப்போனார்கள்.

ஆங்கில இலக்கியங்களைப் பற்றிய அவரது ஆழமான அறிவும்; பைபிளைப் பற்றிய அவரது தெளிவான புரிதலும்; திருக்குர்ஆன் ஒளியில் அமைந்த அவரது பேச்சின் சாரமும் கண்டு அனைவரும் வியந்தனர்.

தனது அறிவாலும், மேடை ஆளுமையாலும் அமெரிக்க மக்களின் அபிமானத்தைப் பெற்ற அவர், 'தவறுகளைக் கண்டு திமிறி எழும்' தனது இயல்பு குணத்தை அங்கேயும் வெளிப்படுத்தினார்.

அமெரிக்கர்களிடையே நிலவும் ஒழுக்கச்சீர்கேட்டையும், கலாச்சார சீரழிவுகளையும் சுட்டிக்காட்டிய அவர், ஒழுக்கவியல் நிறைந்த வாழ்க்கைத் தத்துவத்தை எடுத்துரைத்தார். எளிதில் உணர்ச்சிவயப் படக்கூடியவராகவும், முன் கோபக்காரராகவும் இருந்த அவர், தனக்கேயுரிய வேகத்தில் அமெரிக்கர்களைச் சாடியபோதும், அம்மக்கள் அவர் மீது வெறுப்படையாமல், அவரது கருத்தில் இருக்கும் உண்மைகளையும், நியாயத்தையும் உணர்ந்து தங்களைச் சுயபரிசோதனை செய்துகொண்டனர்.

பல்கலைக்கழக நிகழ்ச்சியோடு அவரைத் திருப்பி அனுப்பாமல், பிலடெல்பியா மாகாணம் முழுவதும் அடுத்தடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்தனர். எல்லா நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று எழுச்சியுரையாற்றினார்,அந்தத் தமிழர்.

அவரது கருத்துக்களால் ஈர்க்கப்பட்ட அமெரிக்கர்கள் பலர் குடிப்பதை மறந்தார்கள்;தீய பழக்கங்களை விட்டு விலகினார்கள்; ஒழுக்கவியலை நோக்கி நகர்ந்தார்கள்; இறுதியில் இஸ்லாத்தை தங்களின் வாழ்வியல் நெறியாக ஏற்றுக்கொண்டார்கள். தமது ஒரு சுற்றுப்பயணத்திலேயே இப்படியொரு அழுத்தமான தாக்கத்தையும், ஆக்கப்பூர்வமான மாற்றத்தையும் ஏற்படுத்திக்காட்டிய அந்த இளம் தமிழர் வேறு யாருமல்ல; அவர்தான் புரட்சியாளர் பழனிபாபா.

1997, ஜனவரி 28 ஆம் நாள் பழனிபாபா படுகொலை செய்யப்பட்டார்.

'நான் வாழ வந்தவனல்ல; மாள வந்தவன்' என்று செல்லுமிடமெல்லாம் முழங்கிய அவர் சொன்னது போலவே மாண்டுபோனார்.

அவர் மறைந்து இன்றோடு 14 ஆண்டுகள் கடந்து விட்டன. அவரது பெயரை உச்சரிக்கவோ; அவரது பங்களிப்புகளை நினைவு கூரவோ; அவரது தியாகங்களைப் போற்றவோ இன்றைய இயக்கங்களுக்கு விருப்பம் இல்லை.

இரத்த தான விழாக்களில் மூழ்கிப் போயிருக்கும் இயக்கங்கள், 'முஸ்லிம்களின் இரத்தம் குடித்த இந்துத்துவ மதவெறிக்கு எதிராக காலமெல்லாம் களமாடிய அந்தப் போராளித் தலைவருக்கு' ஒரு நினைவேந்தல் கூட்டத்தைக் கூட எடுக்கவில்லை.

பழனிபாபா என்றால் கலவரத்தை விதைத்தவர்; இளைஞர்களை வழி கெடுத்தவர்; தவறான முன்னுதாரனங்களுக்கு உரியவர் என்றெல்லாம் அவர் குறித்து மோசமான சித்திரங்கள் வரையப்பட்டுள்ளன. அவரது பன்முக ஆற்றலை மறைத்து, அவரை வன்முறையாளராகக் காட்டும் புனைவுகள் செய்யப்பட்டுள்ளன. அத்தகையச் சித்தரிப்புகளை உடைக்கவோ, புனைவுகளை முறியடிக்கவோ இங்கே எந்த இயக்கமும் தயாராக இல்லை.

பாபாவின் பாசறையில் வளர்ந்த 'மக்கள் ஜனநாயகக் கட்சி'யினர் மட்டும் தங்களின் வலிமைக்கேற்றவாறு ஆண்டுதோறும் புதுஆயக்குடியில் அவரது நினைவேந்தல் நிகழ்ச்சியை நடத்தி வருகின்றனர். ஆனால், பாபாவின் பேச்சையும், எழுத்தையும்,சிந்தனையையுமே இன்றைய தமது செயல் திட்டமாகக் கொண்டு இயங்கும் பெரிய அமைப்புகள் அனைத்தும், அவரை நினைவு கூராமல் தவிர்த்து வருகின்றன.

இன்றைய இயக்கங்களின் பேச்சும், செயல்பாடும், இலக்கும் இன்றைய இயக்கங்களை வழிநடத்தும் தலைவர்களின் சிந்தனையில் உதித்தவை அல்ல.

இன்றைய தலைவர்கள் எதையெல்லாம் பேசுகின்றார்களோ; எந்த செயல் திட்டத்தின் அடிப்படையில் இயங்குகின்றார்களோ; எந்த இலக்கை நோக்கிப் பயனிக்கின்றார்களோ அவற்றையெல்லாம் 25 ஆண்டுகளுக்கு முன்பே பேசியவர்; இயங்கியவர்; பயணித்தவர், பழனிபாபா.

முஸ்லிம்கள் என்றாலே அவர்கள் தங்களின் பிரச்சனைகளுக்காக மட்டுமே போராடுபவர்கள் என்ற கருத்து நிலவிய காலத்தில்,
1980 களிலேயே வெகுமக்களுக்காகக் குரல்கொடுக்கும் மனித உரிமைப் போராளியாக விளங்கினார், பாபா. பேராசிரியர். கல்யாணி போன்ற மனித உரிமை ஆர்வலர்களுடனும், PUCL போன்ற மனித உரிமை அமைப்புகளுடனும் இணைந்து, உரிமைகள் மறுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

நுண்ணிய தளங்களில் இந்துத்துவத்திற்கு எதிராக அழுத்தமானப் பதிவுகளைச் செய்து வரும் பேராசிரியர்.அ.மார்க்ஸை இன்றைய தமிழ் முஸ்லிம் சமூகம் நன்றி உணர்வோடு பார்க்கிறது. ஆனால் தமிழக முஸ்லிம்களுக்கு பேராசிரியர் அ.மார்க்ஸ் என்றால் யாரென்றே தெரியாத ஒரு காலத்தில், சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பே அவரைச் சரியாக இனம் கண்டு அடையாளப்படுத்தியவர், பாபா. 'இஸ்லாமியருக்கு எதிரான கட்டுக்கதைகள்' எனும் தலைப்பில் அ.மார்க்ஸ் எழுதிய நூலை வெளியிடுவதற்கு பெரும் துணை புரிந்தார், பாபா.

முஸ்லிம்களோடு உறவாடும் பிற சமய-சார்பற்ற தோழமை சக்திகள் பலர் இருந்தாலும், ஆபத்தான வேளைகளில் முஸ்லிம்களின் குரலாக ஒலிக்கும் அ.மார்க்ஸ் போன்றவர்கள் அதில் தனிச்சிறப்பு உடையவர்கள் என்பதை பாபா மிகச்சரியாகவே கணித்துள்ளார். பாபாவின் கணிப்பு எவ்வளவு தொலைநோக்குடையது என்பதை, அ.மார்க்ஸின் இடையறாத களப்பணிகளில் இருந்து நாம் உணர்கின்றோம்.

ஜெயலலிதா ஆட்சியில், காஞ்சி சங்கராச்சாரியார் கைது செய்யப்பட்ட போது, நீதிமன்றம் நடந்து கொண்ட முறை மிகவும் பரபரப்பாகப் பேசப்பட்டது. சங்கராச்சாரியாருக்கு ஆதரவான நீதிபதிகளின் ஒருபக்கச் சார்பு கடும்கண்டனத்திற்குள்ளானது. சில ஆண்டுகளுக்கு முன்னால் நடைபெற்ற இந்த நிகழ்வை, பல ஆண்டுகளுக்கு முன்னாலேயே கணித்து முன்னறிவித்தவர் பாபா.

சங்கராச்சாரியாரைக் கொலை செய்ய சதி செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு, பாபா ஒரு முறை சிறையிலடைக்கப் பட்டார். கைதை எதிர்த்து உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடரும் படி பாபாவிடம் பலரும் வலியுறுத்தினர். அப்போது பாபா, 'உயர்நீதிமன்ற நீதிபதி சங்கராச்சாரியாரைச் சந்தித்து ஆசி வாங்கியிருக்கிறார். அப்படிப்பட்டவர் எப்படி எனக்கு நீதி வழங்குவார்' என்று கேள்வி எழுப்பினார். அந்த வகையிலும் பாபாவின் கணிப்பு உண்மையாகிவிட்டதை நாம் நடைமுறையில் கண்டு வருகின்றோம்.

அரசியல் - சமூகப் பணிகளோடு இஸ்லாமிய மார்க்கக் கொள்கைகளிலும் ஆழ்ந்த அறிவு பெற்றிருந்தார், பாபா. பல இஸ்லாமிய கொள்கை விளக்கக் கூட்டங்களில் பங்கேற்று சொற்பொழிவுகளை நிகழ்த்தினார். சுன்னத்வல் ஜமாஅத் கொள்கைத் தளத்தில் நின்று தமது இஸ்லாமியக் கருத்துக்களை எடுத்துரைத்தார். அதே சமயம் முஸ்லிம்களிடையே நிலவும் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகவும் தீவிரமாக முழங்கினார்.

அவரும் வட்டி, வரதட்சணை, அனாசாரம் போன்ற சமூகக் கொடுமைகளை கடுமையாகச் சாடினார். எனினும், அவர் ஒருபோதும் மார்க்கத்தையும், அரசியலையும் போட்டுக் குழப்பிக் கொண்டதில்லை; முஸ்லிம் ஜமாத்துகளைக் கூறு போட்டதில்லை; ஒரே தெருவில் போட்டியாக இன்னொரு பள்ளிவாசலை உருவாக்கி சமூகத்தில் குழப்பத்தையும் பிளவையும் ஏற்படுத்தியதில்லை. அவர் தன் வாழ்நாள் முழுவதும் ஜமாத்துகளின் ஒருங்கிணைப்பையும், முஸ்லிம்களின் ஒற்றுமையையுமே வலியுறுத்தினார்.

பாபாவின் இதழியல் மற்றும் எழுத்துப் பணிகளும் அவரது தொலைநோக்குக்கு சான்றாக விளங்குகின்றன. கிறிஸ்தவம் தொடர்பான பல ஆய்வுகளை மேற்கொண்ட பாபா, 'பைபிள் ஒரு ஆய்வு' என்னும் நூலை வெளியிட்டார். கிறிஸ்தவ பாதிரியார்களுடன் விவாதங்களிலும் ஈடுபட்டார். அது கிறிஸ்தவத்திலும், பைபிளிலும் அவருக்கு இருந்த ஆழ்ந்த புலமையை வெளிப்படுத்தியது. 'ராமகோபாலைய்யருக்கு மறுப்பு' எனும் தலைப்பில் பாபா எழுதிய நூல் மிகப்பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. பாபர் மஸ்ஜித் தொடர்பாக ஆங்கிலத்தில் ஒரு நூலை எழுதினார், பாபா.

'புனிதப் போராளி', 'அல்-முஜாஹித்', 'முக்குல முரசு' போன்ற பத்திரிகைகளை நடத்திய பாபா, அவற்றில் அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதினார். நாடு முழுவதும் முஸ்லிம்களுக்கு எதிராக நடைபெறும் கொடுமைகளையும், அரச அடக்குமுறைகளையும் 'புனிதப் போராளி' மூலம் அம்பலப்படுத்தினார்.

இவ்வாறு, மனித உரிமை அமைப்புகளுடன் தொடர்பு; பேராசிரியர்.அ.மார்க்ஸ் போன்றவர்களுடன் நட்பு; மூட நம்பிக்கை எதிர்ப்பு; சமூகத் தீமைகள் ஒழிப்பு; நூல்கள் மற்றும் இதழ்கள் மூலம் முஸ்லிம்களின் உரிமைகளைப் பேசும் ஊடகப் பங்களிப்பு ; பிற சமய அறிஞர்களுடனான உரையாடல் மூலம் இஸ்லாமிய அழைப்புப் பணி என எந்த செயல் திட்டங்களின் அடிப்படையில் பாபா இயங்கினாரோ, அவை அனைத்தையும் ஒன்று விடாமல் காப்பியடித்து, இன்றைய முஸ்லிம் இயக்கங்கள் இயங்கி வருவதையும், செயல் திட்டங்களைக் கற்றுத்தந்த பாபாவை மட்டும் மறந்து விட்டதையும் இன்று காண்கின்றோம்.

பாபாவின் சமூகப் பங்களிப்புகளை நினைவுகூரும் கடமையிலிருந்து இயக்கங்கள் தவறி விட்டாலும், இளைஞர்கள் தவறமாட்டோம் என்பதை எடுத்துரைக்கவே பாபாவை மறுவாசிப்பு செய்கின்றோம். ஏனெனில், பாபா இளைஞர்களைத்தான் அதிகம் நம்பினார். இளைஞர்களையே மிகவும் விரும்பினார். 'வரலாறு என்னை விடுதலை செய்யும், வரும்காலம் என் சார்பில் வஞ்சமெடுக்கும்' என்று மேடைகள் தோறும் முழங்கினார். நமக்காக முழங்கியவரை, நமது விடியலுக்காக ஏங்கியவரை நினைவு கூராமல் விட்டால் அது நன்றி கொன்றதாக ஆகிவிடும். ஆகவே, பாபாவை அறிந்து கொள்வோம். அடுத்த தலைமுறைக்கும் அவரை எடுத்துச் செல்வோம்.

1950 நவம்பர் 14 ஆம் நாள், என்.வி.முஹம்மது அலி - கதீஜா பீவி தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார் பழனிபாபா. அஹமது அலி என்பது இயற்பெயர். ஆனால், 'பழனிபாபா' என்ற அடைமொழியே பின்னாளில் அவரது பெயராக மாறிப்போனது. பழனியிலிருந்து 4 கி.மீ தொலைவில் திண்டுக்கல் செல்லும் பாதையில் அமைந்துள்ள புதுஆயக்குடி என்னும் கிராமம் தான் பாபாவின் தாய் வழிப் பூர்வீகமாகும். பாபாவின் தந்தை நீலகிரி மாவட்டம் குன்னூரைச் சார்ந்தவர். ஊட்டியில் உள்ள ஆங்கிலப்பள்ளி ஒன்றில் கல்வி பயின்று வந்த பாபாவும், அவரது சகோதர சகோதரிகளும், பெற்றோரின் மறைவுக்குப் பின் புது ஆயக்குடியில் உள்ள தாய்மாமா அப்துல் ரஹ்மான் அவர்களின் பராமரிப்பில் வளர்ந்து வந்தனர்.

பழனி ஆண்டவர் கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த பாபா, கல்லூரி நாட்களிலேயே பொது வாழ்வில் ஈடுபடத் தொடங்கினார். புது ஆயக்குடியில் நைனா முகம்மது என்பவர் தலைமையில் நடைபெற்ற முஸ்லிம்லீக் நிகழ்ச்சியில் பங்கேற்றுப் பேசியதுதான் பாபாவின் முதல் மேடை அனுபவமாகும்.

கிறிஸ்தவப் பள்ளிக் கூடத்தில் ஆங்கில வழிக்கல்வி பயின்றதனால் ஆங்கிலப் புலமை மிகுந்தவராகப் பரிணமித்தார் பாபா. எதையும் எளிதில் உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றலுடையவராகவும்; நுனிப்புல் மேயாமல் ஆழ்ந்து பார்க்கும் அறிவுடையவராகவும்; துணிவையும், மனோ தைரியத்தையும் இயல்பாகக் கொண்ட தன்னம்பிக்கை மனிதராகவும் சிறந்து விளங்கிய அவர், அத்தகைய பிறவி குணத்தால் மிக வேகமான வளர்ச்சியை அடைந்தார்.

இந்துத்துவ எதிர்ப்பு; சிறுபான்மையினர் பாதுகாப்பு; உழைக்கும் வர்க்கச் சார்பு; முஸ்லிம் சமுதாய விழிப்புணர்வு; ஒடுக்கப்பட்டோர் அரசியல் விடுதலை; இஸ்லாமிய கருத்தியல் குறித்த பரப்புரை என தனது கொள்கைகளை வரையறுத்துக் கொண்ட அவர், அக்கொள்கைகளின் அடிப்படையில் மிகத் தீவிரமாக களமாடினார். தமிழகத்தில் அவர் பயணிக்காத கிராமங்களே இல்லை. தமிழகத்தின் எல்லைகளைத் தாண்டி இந்தியா முழுவதும் வலம் வந்தார். இந்தியாவைக் கடந்து அமெரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா என நாடு நாடாகச் சுற்றினார். அவ்வாறு அவர் சென்ற இடமெல்லாம் அதிர்வலைகளை ஏற்படுத்தினார்.

பாபாவின் தனித் திறமைகளினாலும், நாவண்மையினாலும் ஈர்க்கப்பட்ட அரசியல் தலைவர்களும், சமூக சிந்தனையாளர்களும் அவருக்கு நெருக்கமானார்கள். இந்திராகாந்தி முதல் எம்ஜிஆர் வரை எல்லா அரசியல்வாதிகளுடனும் பாபாவுக்குத் தொடர்பு இருந்தது. டாக்டர் ராமதாஸ் முதல் டாக்டர் சேப்பன் வரை எல்லா சமூகத் தலைவர்களுடனும் அவருக்கு உறவு இருந்தது. அ.மார்க்ஸ் முதல் அனீஸ் பாத்திமா [நர்கிஸ்] வரை எல்லா சிந்தனையாளர்களுடனும் அவருக்கு நட்பு இருந்தது.

பாபா, ஒரு பன்முக ஆளுமை. அநீதியைக் கண்டு ஆர்த்தெழும் இயல்பைக் கொண்டவர்.தவறுகள் எங்கே நடந்தாலும் தன் சட்ட ஞானத்தால் தட்டிக்கேட்டவர். இந்திய குடியரசுத் தலைவராக இருந்த பிராமணரான ஆர்.வெங்கட்ராமன் தனது பதவிக் காலத்தில் அரசுப் பணத்தில் திருப்பதி கோவிலுக்கு அடிக்கடி சென்று வந்தார். தமது தனிப்பட்ட மத நம்பிக்கைகளுக்காக மக்கள் பணத்தை விரயமாக்கிய ஆர்.வியின் செயலை கடுமையாகக் கண்டித்த பழனிபாபா, 'வெங்கட்ராமன் திருப்பதிக்கு அடிக்கடி சென்று வந்த மொத்த செலவினத்தையும் அரசுக்குத் திருப்பி செலுத்த வேண்டும்' என்று கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்குத் தொடுத்தார். இப்படி அதிகாரத்தை நோக்கிய உண்மையின் குரலாக ஒலித்த பாபாவை நாடே திரும்பிப் பார்த்தது.

1980 களில் நிகழ்ந்த மீனாட்சிபுரம் மதமாற்றத்தை தொடர்ந்து குமரிமாவட்டம் மண்டைக்காட்டில் நடைபெற்ற கலவரம் தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ்ஸின் வரவை அறிவிப்புச் செய்தது. 'இந்து முன்னணி' என்ற மாற்றுப் பெயரில் களமிறங்கிய இந்துத்துவ சக்திகள், அமைதிப்பூங்காவான தமிழகத்தை அமளிக்காடாக்கினர். விநாயகர் ஊர்வலத்தை அறிமுகப்படுத்தி முஸ்லிம்களை வம்புக்கு இழுத்தனர். 'காமவெறியில் விஞ்சி நிற்பவள் கதீஜாவா? அன்னை மேரியா? மணியம்மையா?' என்ற தலைப்பில் பட்டிமன்றங்களை நடத்தினர். முஸ்லிம்களின் உயிருக்கு உயிரான நபிகளாரைப் பற்றி தரக்குறைவாக விமர்சித்து வெறிக்கூச்சலிட்டனர்.

ஆர்.எஸ்.எஸ் கும்பலின் இத்தகைய அராஜகச் செயல்களால் தமிழகம் முழுவதும் பற்றி எரிந்தது. கோவை, விழுப்புரம், ஆம்பூர், தேவிப்பட்டினம், ஆத்தூர், சேலம், வாணியம்பாடி, தேங்காப்பட்டினம், திண்டுக்கல், குளச்சல், காயல்பட்டினம், கடையநல்லூர், திருவல்லிக்கேணி, மேட்டுப்பாளையம், பழனி, அதிராம்பட்டினம், முத்துப்பேட்டை, அத்திக்கடை, மேலப்பாளையம், நாகூர் என்று... எங்கு பார்த்தாலும் கலவரம். இந்துத்துவ வெறியர்களின் கோரத் தாக்குதலுக்கு இலக்காகிய முஸ்லிம்கள் பாதுகாப்பற்ற நிலைக்குத் தள்ளப்பட்டனர். அத்தகைய இருண்ட சூழலில் ஒளிக்கீற்றாய் உதித்தவர்தான் பழனிபாபா.

ஆர்.எஸ்.எஸ்ஸின் அராஜகங்களைக் கண்டு அஞ்சி நடுங்கிய சமூகத்திற்கு தைரியமூட்டினார், அவர்.
பேசவே பயந்து வாய் பொத்தி ஊமையாய்க் கிடந்த சமூகத்திற்கு கேள்வி கேட்க கற்றுத் தந்தார். இந்து முன்னணியின் மதவெறிக் கூட்டங்களுக்கு எதிர் கூட்டம் போட்டு தமது அபாரமான பேச்சுத் திறனால் தக்க பதிலடி கொடுத்தார். அவர் கலவரத்தை விதைத்தவர் இல்லை; கலவரத்தை விதைத்தவர்களுக்கு எதிரான கருத்தை விதைத்தவர்.

இந்துத்துவ மதவெறிக்கு எதிராக களமாடிய அதே வேளையில், முஸ்லிம்களை ஒடுக்கிய அரச பயங்கரவாதத்திற்கு எதிராகவும் வீச்சோடு இயங்கினார், பாபா. முஸ்லிம்களுக்கு எதிரான அதிகார வர்க்கத்தின் நடவடிக்கைகளை துணிந்து அம்பலப்படுத்தி வந்த அவர், இடையறாத சட்டப் போராட்டத்தின் மூலம் ஆட்சியாளர்களையும், அதிகாரிகளையும் மிரள வைத்தார். அச்சத்தின் பிடியிலிருந்த முஸ்லிம்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டினார்.

பாபா மீது நான்கு முறை தேசிய பாதுகாப்புச் சட்டம் பாய்ச்சப்பட்டது. 80 க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. நூற்றுக்கு மேற்பட்ட முறை சிறை சென்று வந்த அவர், எல்லா ஒடுக்குமுறைகளையும் உடைத்தெறிந்தார். தடா சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்ட பிறகும், இந்தியாவிலேயே கைது செய்யப்பட முடியாத ஒரே மனிதராகவும் அவர் இருந்தார்.

இந்துத்துவ கும்பலின் பயங்கரவாத நடவடிக்கைகளை ஜனநாயகத் தளத்தில் நின்று எதிர்கொள்ளும் வகையில், பாபா உருவாக்கிய மக்கள் திரளைக் கண்டு புறமுதுகிட்டு ஓடினார்கள் இந்து முன்னணியினர். பாபாவின் படையை நேருக்கு நேராகச் சந்திக்கும் துணிவற்ற அவர்கள், அதிகாரத்தின் துணையை நாடினார்கள். பாபாவின் பின்னால் அணிவகுத்த இளைஞர்கள் மீது அடக்குமுறைச் சட்டம் பாய்ந்தது. பாபாவின் ஆதரவாளர்கள் குறிவைக்கப்பட்டனர்; கண்காணிக்கப்பட்டனர்; கைது செய்யப்பட்டனர். சிறையிலடைக்கப்பட்ட அனைவருக்கும் சட்ட ரீதியான உதவிகளைச் செய்தார், பாபா. சிறையிலிருந்த முஸ்லிம் இளைஞர்களின் குடும்பங்களைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அந்த குடும்பங்களின் செலவினங்களுக்கு மாதந்தோறும் மணியார்டர் செய்து வந்தார். பாபாவின் இத்தகைய குணச்சிறப்பின் காரணமாக ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அவர் மீது அபிமானம் கொண்டனர். பாபாவின் படை மேலும் வலிமை பெற்றது.

இந்துத்துவத்தை தனியொரு சமூகமாக நின்று எதிர்க்க முடியாது என்ற நடைமுறை உண்மையைப் புரிந்து கொண்ட பாபா தொடர்ச்சியாக பல வியூகங்களை வகுத்தார். இந்துத்துவத்தால் பாதிக்கப்படும் ஏனைய சமூகங்களையும் இணைத்துக் கொண்டு போராட்டத்தை முன்னெடுத்தார். பிற்படுத்தப்பட்ட சமூகங்களின் மறுமலர்ச்சிக்கு வித்திட்ட மண்டல் கமிஷனை ஒழித்தது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை எதிர்க்க பிற்படுத்தப்பட்டவர்களே வாருங்கள் என 'டச்சிங்காக' அழைப்பு விடுத்தார்.

தாழ்த்தப்பட்ட மக்களை கோயிலுக்குள் நுழைய விடாமல் ஊருக்கு வெளியே சேரியில் ஒதுக்கி வைத்து வதை செய்கின்றது இந்துத்துவம். ஆகவே, இந்துத்துவத்தை வேரறுக்க தலித் மக்களே அணிதிரள்வீர் என உணர்வுப் பூர்வமாக அறைகூவல் விடுத்தார்.

அத்தகைய அறைகூவலுக்கு செயல் வடிவம் கொடுக்கும் வகையில் பிற்படுத்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும், தாழ்த்தப்பட்ட சமூகத் தலைவர்களுடனும் உறவை வளர்த்துக் கொண்டார். வன்னியர் சமூகத் தலைவரான டாக்டர் ராமதாசுடனும், தலித் சமூகத் தலைவரான டாக்டர் சேப்பனுடனும் இணைந்து களம் கண்டார்.

வன்னியர் சங்கத்தை பாட்டாளி மக்கள் கட்சியாக ராமதாஸ் மாற்றிய போது, பா.ம.கவுக்கு ஒரு வெகுஜன அடையாளத்தைப் பெற்றுத் தந்தவர் பழனிபாபா. தனது ஜிகாத் கமிட்டித் தொண்டர்களை பாமகவில் இணைந்து செயலாற்றும் படி ஊக்கப்படுத்தினார். அவரது அறிவுரையை ஏற்றுக்கொண்ட ஆயிரக்கணக்கான முஸ்லிம் இளைஞர்கள் பாமகவில் இணைந்தார்கள்.

அவ்வாறு இணைந்தவர்கள் பட்டி தொட்டியெங்கும் பா.ம.க பொதுக்கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தனர். அந்த கூட்டங்களில் பங்கேற்று பழனிபாபா முழங்கினார். ஒடுக்கப்பட்ட சமூகங்களின் நம்பிக்கை நாயகனாக ராமதாசை முன்னிறுத்தினார். வன்னியர் சாதிக்கட்சி என்ற முத்திரையிலிருந்து விலகி, ஒட்டுமொத்த ஒடுக்கப்பட்ட மக்களின் கட்சியாக பா.ம.கவை அடையாளப்படுத்துவதற்கு கடுமையாக உழைத்தார்.

பா.ம.க படிப்படியாக வளர்ந்து அடுத்தக் கட்டத்தை நோக்கி நகர்ந்தது. ராமதாசின் அரசியல் நடவடிக்கைகளில் மெல்லிய மாற்றங்களும் நிகழ்ந்தன. அறிவுக் கூர்மையுள்ள பாபா அதை உணர ஆரம்பித்தார். ராமதாசிடம் ஏற்பட்ட மெல்லிய மாற்றம் ஒரு கட்டத்தில் வலிமையாக வெளிப்பட்டது. பா.ம.க கூட்டங்களில் பாபா பேசிய பிறகு இறுதியாக ராமதாஸ் பேசுவார். பாபாவின் அனல் பேச்சைக் கேட்க ஆயிரக்கணக்கில் திரண்டு நிற்பவர்கள், அவர் பேசி முடித்ததும் கலைந்து சென்று விடுவார்கள். ராமதாஸ் பேசத் தொடங்கும் போது கூட்டம் சில நூறு பேர்களாகச் சுருங்கி விடும். இதுவும் ஒரு வகையில் ராமதாசுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது. விளைவு; பாபாவை கூட்டங்களுக்கு அழைக்காதீர்கள் என பா.ம.கவினருக்கு ராமதாஸ் வாய்மொழி உத்தரவு போட்டார். பாபாவுக்கும் ராமதாசுக்கும் இடையே முரண்பாடு மேலும் அதிகரித்தது.

அதே காலகட்டத்தில் பால்தாக்கரேயை ஆதரித்து அறிக்கை விட்டார் ராமதாஸ். மேலும் பாஜக தலைவர்களுடன் நெருங்கத் தொடங்கினார். ராமதாசின் கொள்கைத் தடுமாற்றத்தைக் கண்டு கடும் அதிருப்தி அடைந்த பாபா தனது தொண்டர்களிடம், 'முஸ்லிம்கள் பா.ம.கவில் இருக்க முடியாத சூழல் உருவாகிவிட்டது' என வெளிப்படையாகக் கூறினார். பின்னர் அதையே மேடைகளிலும் எதிரொலித்தார்.

1996, சட்டமன்றத் தேர்தலின்போது, புதுக்கோட்டைத் தொகுதியில் பா.ம.க வேட்பாளராகப் போட்டியிட்ட கே.எம்.ஷெரீபை ஆதரித்துப் பிரச்சாரம் செய்த பாபா, 'இதுதான் பிற அரசியல் கட்சிக்காக, தாம் பேசுகிற கடைசி பேச்சு என்றும், இனி எந்த அரசியல் கட்சிக்கும் ஓட்டு கேட்க மாட்டேன் என்றும், எதிர்காலத்தில் சமுதாயத்திற்காகவே ஓட்டு கேட்பேன்' என்றும் அறிவிப்பு செய்தார். பா.ம.கவினால் பாபாவுக்கு ஏற்பட்ட ஏமாற்றம், தனியொரு அரசியல் கட்சியைக் கட்டமைக்கும் சிந்தனைக்கு அவரைத் தள்ளியது.

எண்ணிக்கையின் அடிப்படையில் தீர்மானிக்கப்படும் அரசியலை எப்படி வென்றெடுப்பது என்ற ஆய்வில் இறங்கினார். இறுதியில், கேரளாவுக்குச் சென்று மக்கள் ஜனநாயகக் கட்சியின் [பிடிபி] தலைவர் அப்துல் நாசர் மதானியை சந்தித்தார். அங்கு முஸ்லிம்களையும், தலித்துகள் உள்ளிட்ட ஒடுக்கப்பட்ட மக்களையும் இணைத்த அரசியல் வியூகத்தின் மூலம் வலுவான ஜனநாயக சக்தியாக எழுச்சி பெற்றிருந்த மதானியுடனான பாபாவின் சந்திப்பு, அவருக்குப் புதிய நம்பிக்கையையும் தெம்பையும் ஊட்டியது.

முஸ்லிம்களையும், தலித்துகளையும், அரசியல் மைய நீரோட்டத்தில் தவிர்க்க முடியாத தனிப்பெரும் சக்தியாக மாற்றும் வகையில் தமிழகத்தில் மக்கள் ஜனநாயகக் கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்தார் பாபா. தமிழகத்தில் பி.டி.பியை தொடங்கும் முன்னர் கொடிக்கால் ஷேக் அப்துல்லாஹ் அவர்களுடன் கலந்தாலோசிக்குமாறு பாபாவிடம் கேட்டுக் கொண்டார், மதானி.

பாபா கொடிக்காலை சந்தித்தார். அடுத்தக் கட்ட அரசியல் நகர்வு பற்றி விவாதித்தார். பாபாவின் முடிவுகளை மகிழ்ச்சியோடு வரவேற்றார் கொடிக்கால். பின்னர் ஜிகாத் கமிட்டியினருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், கேரளாவின் பி.டி.பி கட்சியை தமிழ்நாட்டில் தொடங்குவதிலுள்ள நடைமுறைச் சிக்கல்கள் விவாதிக்கப்பட்டன. முடிவில் மதானியின் அரசியல் அஜெண்டாவை ஏற்றுக்கொள்வது என்றும், ஜிகாத் கமிட்டியையே அரசியல் கட்சியாக மாற்றுவது என்றும் முடிவு செய்யப்பட்டது.

கட்சியைப் பதிவு செய்வதற்கும், கட்டமைப்பை உறுதிப்படுத்துவதற்கும், கிளைகளை விரிப்பதற்கும் பணிகளை முடுக்கி விட்டார், பாபா. தனது பேச்சில் இருந்த வேகத்தைக் குறைத்து, வியூகத்தை கூர்தீட்டினார். தமிழகம் முழுவதுமுள்ள முஸ்லிம் ஜமாத்துகளை ஒருங்கிணைக்கும் பணிகளில் மும்முரமாக ஈடுபட்டார். பாபாவின் அத்தகைய முயற்சிகளுக்கு உடனடி பலன் கிடைத்தது. பல மாவட்டங்களில் ஜமாத்துகள் ஒருங்கிணையத் தொடங்கின.

முஸ்லிம்களை ஒருங்கிணைப்பது; தலித்துகளுடன் உரையாடுவது; இரண்டு சமூகங்களும் இணைந்து அரசியல் அதிகாரத்தை வென்றெடுப்பது என்ற வியூகம்தான் பாபா கையிலெடுத்த கடைசி ஆயுதம். எதிர்காலத்தில் கட்சிகளின் கூட்டமைப்பு வலுவிழந்து விடும் என்றும், ஒடுக்கப்பட்ட சமூகங்களின் கூட்டமைப்புதான் வலுப்பெறும் என்றும் பாபா கூறி வந்தார். அத்தகைய கூட்டமைப்பை உருவாக்குவது சாதாரண வேலையல்ல என்றும், அது மிகப்பெரும் அர்பணிப்புக்குப் பின்னரே சாத்தியமாகும் என்றும் அவர் முன்னுணர்ந்தார்.

இத்தகைய அரசியல் நிலைப்பாட்டுடன் களப்பணியை நோக்கி பாபா நகரும் போதுதான் திடீரென படுகொலை செய்யப் பட்டார்.

1997, ஜனவரி 28 ஆம் நாள் இரவு பொள்ளாச்சியில் உள்ள பாபாவின் நண்பர் பசுவராஜ் என்கிற தனபால் வீட்டிற்கு பாபா சென்றார். 30 ஆண்டுகால நண்பரான தனபாலோடு சுமார் ஒரு மணி நேரம் தனிப்பட்ட, குடும்ப விசயங்களைப் பற்றி உரையாடிவிட்டு இரவு 9.30 மணியளவில் அங்கிருந்து விடைபெற்றார். புறப்படுவதற்கு பாபா தனது ஜீப்பில் ஏறி அமர முயன்ற போது, கையில் சிறிய கோடாலி போன்ற ஆயுதத்துடன் பாபாவை நெருங்கிய அந்த மர்ம மனிதன், திடீரென பாபாவின் தலை,நெஞ்சு,உடல் என சரமாரியாக வெட்டினான். பாபா நிலைகுலைந்து சாய்ந்தார்.

அதிர்ச்சியடைந்த பாபாவின் நண்பர் தனபால், 'டேய் டேய்' என சத்தமிட்டுக் கொண்டே அந்தக் கொலைகாரனை விரட்டினார். அப்போது அவன் 'நீ எனக்கு குறி இல்லை, போடா ஒதுங்கி' என அவரைத் தள்ளிவிட்டு ஓடிவிட்டான். சற்று தூரத்தில் நின்றிருந்த அம்பாசிடர் கார் ஒன்றில் தொற்றிக் கொண்ட அவன் தப்பித்து விட்டான்.பாபா படுகொலை செய்யப்பட்ட செய்தி தமிழகம் முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. ஆங்காங்கே கலவரம், கல்வீச்சு, கறுப்புக் கொடி போராட்டம் என எதிர்ப்பு வலுவாக இருந்தது. கனத்த இதயத்தோடும், கண்ணீர் பெருக்கோடும் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்த மக்கள் திரளுக்கு மத்தியில், பழனி அருகேயுள்ள புது ஆயக்குடியில் பாபாவின் உடல் நல்லடக்கம் செய்யப் பட்டது.
பாபாவின் படுகொலையில் தொடர்புடைய கொலையாளிகள் அனைவரும் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பி விட்டனர். பாபா கொலை வழக்கை முன்னெடுப்பதற்கும், கொலையாளிகளுக்கு உரிய தண்டனையை பெற்றுத் தருவதற்கும் உருப்படியான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப் படவில்லை.

பாபாவின் ஆதரவாளர்களிடம் இது குறித்து கேள்வி எழுப்பிய போது 'கைது செய்யப் பட்டவர்கள் உண்மையான குற்றவாளிகள் அல்ல' என்றும், அவர்களுக்கு எதிராக வழக்கு நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என்றும், பாபா படுகொலைக்குப் பின்னணியில் பல மர்ம முடிச்சுகள் இருக்கின்றன என்றும் கூறி அதிர்ச்சியளிக்கின்றனர். அது என்ன மர்ம முடிச்சு என்பதை நம்மால் விளங்க முடியவில்லை.

ஆனால், அவரது படுகொலைக்குப் பின்னால் இருக்கும் அரசியலை நம்மால் தெளிவாகப் புரிந்து கொள்ள முடிகிறது.

பாபா, இந்துத்துவ மதவெறிக்கு எதிராக மிகத் தீவிரமாக சொற்போர் நிகழ்த்திய காலங்களில் கொல்லப்படவில்லை. முஸ்லிம்களுக்கு எதிரான அரச அடக்குமுறைகளை அம்பலப்படுத்தி மக்களை அணி திரட்டிய காலத்திலும் கொல்லப்படவில்லை. பிற்படுத்தப்பட்ட சமூகத்தவர்களோடு இணைந்து அவர்களின் அரசியல் அமைப்பை வலுப்படுத்த உழைத்த காலங்களிலும் படுகொலை செய்யப்படவில்லை.

மாறாக, எப்போது அவர் பேச்சைக் குறைத்து, செயல் வீச்சை அதிகரித்து, ஜமாத்துகளை ஒருங்கிணைத்து, முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் பயணத்தை முன்னெடுக்க முயன்றாரோ அப்போதுதான் அவர் படுகொலை செய்யப்பட்டார்.

அப்படியென்றால், எந்த முயற்சி வெற்றி பெறுமோ; எந்த முயற்சி ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு விடிவைத் தருமோ; எந்த முயற்சி முஸ்லிம்களுக்கு உரிய பயனளிக்குமோ...அந்த முயற்சியில் அவர் ஈடுபட முயன்றபோதே கொல்லப்பட்டு விட்டார் என்றால், அதன் பின்னணியில் இருக்கின்ற 'அரசியல்' எது என்பதை ஆய்வு செய்தாக வேண்டும்.

இந்துத்துவத்தின் நேரடித் தாக்குதல்களுக்கு இலக்காகின்ற இரட்டைச் சமூகமான முஸ்லிம்களும், தலித்துகளும் இணைவது இயல்பாகவே சாத்தியமானது. இரு சமூகங்களுக்குமான உறவு இரண்டறக் கலந்தது. இரண்டு சமூகங்களும் பல்வேறு அரசியல் கட்சிகளால் வஞ்சிக்கப்பட்ட வரலாற்றுக்கு உரியது. சரியான தலைமைகள் இன்றித் தடுமாறும் நிலைமையை உடையது. நாடு முழுவதும் வாக்குகளைத் தீர்மானிக்கும் சக்திகளாகவும், மக்கள் தொகை அடிப்படையில் ஒருங்கிணைந்த மிகப்பெரிய சமூகங்களாகவும் இருப்பதால், இரண்டு சமூகங்களையும் இணைத்த அரசியல் நடவடிக்கை என்பது இரண்டு சமூகங்களையும் தவிர மற்ற எல்லோருக்கும் சிக்கலானது. இரண்டு சமூகங்களையும் வஞ்சித்து அரசியல் பிழைப்பு நடத்தும் அனைவருக்கும் ஆபத்தானதும் கூட.

எனவே, அந்த இணைப்பு அஜெண்டாவை கையிலெடுப்பவர்கள் பல்வேறு இன்னல்களுக்கும் நெருக்கடிகளுக்கும் ஆளாவார்கள். அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் அகற்றப்படுவார்கள்; அல்லது அழிக்கப்படுவார்கள்.

கேரள மாநிலத்தில், முஸ்லிம்களும் தலித்துகளும் இணைந்த அரசியல் அஜெண்டாவை கையிலெடுத்த மதானி, பொய் வழக்குகள் சுமத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டு அரசியல் மைய நீரோட்டத்திலிருந்து அகற்றப்பட்டார். அதே வழிமுறையை தமிழகத்தில் கையிலெடுக்க முயன்ற பழனிபாபா அழிக்கப்பட்டார்.

பாபாவின் மறைவுக்குப் பிந்தைய தமிழக முஸ்லிம்களின் அரசியல் போக்கு, இலக்கற்றுத் தடுமாறிக் கொண்டிருப்பதை மீளாய்வு செய்தால் அந்த உண்மை நமக்கு விளங்கும்.

பழனிபாபா, தனது பொதுவாழ்க்கைப் பயணத்தில் முதலில் எம்ஜிஆருடன் நெருக்கமாக இருந்தார். பின்னர் அதே எம்ஜிஆர்தான் தமது ஆட்சிக்காலத்தில் பாபாவின் கூட்டங்களுக்குத் தடை போட்டார். ஒவ்வொரு தடையையும் நீதிமன்றத்தில் சென்று அனாயாசமாகமுறியடித்து, வெற்றிகரமாக கூட்டம் நடத்துவார், துணிச்சல்கார பாபா. இதனால் எரிச்சலடைந்த எம்ஜிஆர் சென்னை புனித ஜார்ஜ் கோட்டைக்குள் பழனிபாபா நுழையத் தடை என அரசாணை கொண்டு வந்தார்.

பாபாவுக்கும், எம்ஜிஆருக்கும் இடையிலான முரண்பாட்டைக் கவனித்த கலைஞர், எம்ஜிஆரை எதிர்க்க பாபாவை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். ஒரு கட்டத்தில் கலைஞருடனும் முரண்பட்டார் பாபா. எம்ஜிஆராவது பாபாவின் கூட்டங்களுக்குத் தான் தடை போட்டார். ஆனால் கலைஞரோ, பாபாவைக் கைது செய்து சிறையிலடைக்கும் அளவுக்கு கடுமை காட்டினார்.
இறுதியில், டாக்டர் ராமதாசோடு நெருங்கிய பாபா, அவரோடும் முரண்பட்டு விலகினார்.

பழனிபாபா, எம்ஜிஆரையும் கலைஞரையும் ராமதாசையும் சமுதாயத்திற்காகவே ஆதரித்தார்; சமுதாயத்திற்காகவே எதிர்த்தார். சுயநல அரசியலையோ, அல்லது பிழைப்புவாத அரசியலையோ அவர் முன்னெடுத்திருந்தால் எந்தத் தலைவரோடும் அவருக்கு முரண்பாடுகள் ஏற்பட்டிருக்காது. யாரோடும் சமரசமாகி விடாமல் அவர் காத்த கொள்கை உறுதிதான் அவரை தனித்து இயங்க வைத்தது; ஷஹீது அந்தஸ்துக்கு உயர்த்தி வைத்தது.

பாபா மிக இயல்பானவர்; உள்ளொன்று வைத்து புறமொன்று பேசத் தெரியாதவர். மனதில் பட்டதை பட்டெனச் சொல்லிவிடும் பழக்கமுடையவர். இன்றைய அரசியல் சமூகத் தலைவர்களுக்கு உரிய, இன்றைய அரசியல் சூழலுக்கு மிகவும் அவசியமான 'நடிக்கும் திறன்' பாபாவிடம் இருந்ததில்லை. அவர் வெள்ளந்தியான மனிதராக இருந்தார்.

பாபாவின் உழைப்பை அவரோ அல்லது அவரது இயக்கமோ அறுவடை செய்யவில்லை. உழைப்பைத்தான் அறுவடை செய்யவில்லை; அவரது இறப்பையாவது அவரது இயக்கம் அறுவடை செய்ததா எனில் அதுவும் இல்லை. அவரது இறப்புக்குப் பிறகு அவரது இயக்கமே இல்லை என்ற நிலையாகி விட்டது.

பாபாவின் இறப்பை அறுவடை செய்தவர்கள் யாரென்றால், பாபா வாழும் காலம் வரை அவரைக் கடுமையாக விமர்சித்தவர்கள் என்பதுதான் மிகப்பெரும் கொடுமை.

பாபாவை, பெண்பித்தர் என்றும், பாபா, முஸ்லிம் இளைஞர்களைத் தவறாக வழிநடத்துகிறார் என்றும் குற்றம் சாட்டி அவருக்கு எதிரான பரப்புரைகளில் ஈடுபட்டவர்கள்தான் அவரது இறப்பை பக்கம் பக்கமாக செய்தியாக்கி, முஸ்லிம் இளைஞர்களை உசுப்பேற்றி இயக்கம் வளர்த்தார்கள். பாபாவின் உண்மையான சமூகப் பங்களிப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் சொல்லாமல் மறைத்தார்கள்.

ஆனால், பாபாவுக்கு 'ஷஹீது' என்னும் மிகப்பெரிய கண்ணியத்தை வழங்கிய இறைவன், அவர் மீது அவதூறு பரப்பிய தறுதலைகளையோ அசிங்கப்படுத்தினான்.

பாபா, இளைஞர்களை வழிகெடுக்கிறார் என்று எந்த மனிதர் பாபா மீது அவதூறு வீசினாரோ, அந்த மனிதரைப் பற்றித்தான் 'எங்களை வழிகெடுத்தார் ; எங்களை குண்டுவைக்கத் தூண்டினார்' என்று சிறை மீண்ட இளைஞர்களைப் பேட்டி கொடுக்கச் செய்தான் இறைவன்.

பாபாவை, பெண்பித்தர் என்று யார் விமர்சித்தார்களோ, அவர்களே ஒருவர் மீது ஒருவர் பாலியல் குற்றச்சாட்டு சுமத்தி, அசிங்கப்பட்டு, தனித்தனி இயக்கம் காணும் அளவுக்கு அம்பலப்படுத்தினான், இறைவன்.

'அரசன் அன்று கொல்வான்; தெய்வம் நின்று கொல்லும்' என்பதெல்லாம் வழக்கொழிந்து போன பழமொழியாகிவிட்டது. 'தெய்வமும் அன்றே கொல்லும்' என்பதுதான், பாபாவை எதிர்த்தவர்களுக்கு ஏற்பட்ட இழி நிலையிலிருந்து நமக்குத் தெரியவருகிறது.

பாபா, தாம் பேசும் கூட்டங்களில் எல்லாம் தவறாமல் ஓர் ஒப்புதல் வாக்குமூலத்தை அளிப்பார். ''I Plead Guilty - நான் குற்றத்தை ஒப்புக்கொள்கிறேன்''.

அப்பாவி மக்கள் மீது அரசியல்வாதிகளின் அராஜகம் பாயும் போது அதை தட்டிக் கேட்பது அயோக்கியத்தனம் என்றால், நான் மிகப்பெரும் அயோக்கியனே!

முஸ்லிம்கள் மீது திராவகம் வீசப்படுவதை தடுக்கப் போனது தீவிரவாதம் என்றால் நான் மாபெரும் தீவிரவாதியே!

ஜனநாயக உரிமைகளைக் கேட்பது சாதிவெறி என்றால் நான் மாபெரும் சாதி வெறியனே!

சகோதரத்துவம் போற்றுவது, சட்டவிரோதம் என்றால் நான் சட்ட விரோதியே!

இஸ்லாத்தின் மாண்புகளை கூறுவது மதவெறி என்றால் நான் மாபெரும் மதவெறியனே!

என் மக்கள் மீது ஏவப்படும் அடக்கு முறைகளுக்கு எதிராகப் போராடுவது குற்றம் என்றால் நான் மிகபெரும் குற்றவாளியே!'' என்றார் பாபா.

அவர் எந்தக் குற்றத்தை இழைத்தாரோ...
அந்தக் குற்றத்தை நாமும் இழைப்பதுதான்
அவருக்கு நாம் செலுத்தும் நன்றிக் கடனாக இருக்க முடியும்!

நன்றி:ஆளூர் ஷாநவாஸ் கட்டுரை...

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR