ASSALAMU ALAIKKUM (VARAH)*****அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்)...உங்கள் அனைவரின் மீதும் ஏக இறைவனின் சாந்தியும் சமாதானமும் என்றென்றும் உண்டாவதாக...

Friday 26 October 2012

பூமியின் கூரை!

                                          பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere)





நமது பூமி மற்றும் பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலத்திற்கே வரும் ஆபத்து என்னவெனில், காற்று மண்டலத்திற்கு அப்பாலுள்ள எல்லையற்ற ஆகாய வெற்றுவெளியில் இந்த காற்று மண்டலம் முழுவதுமே சி
தறுண்டு போகும் அபாயமாகும். இதுநாள் வரையிலும் பூமியின் புவியீர்ப்பு விசையே நமது காற்றுமண்டலத்தை அவ்வாறு சிதறுண்டு போய்விடாமல் பிடித்துக் கொண்டிருப்பதாக விஞ்ஞானிகள் கருதிக் கொண்டிருந்தனர். ஆனால் இன்றைய நவீன விஞ்ஞானிகள் சூரியனின் வெப்பக்கதிர்களால் மிக அதிக அளவில் வெப்பமடையும் இந்த வாயுக்களைத் தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கும் சக்தி பூமியின் ஈர்ப்புச் சக்திக்குக் கிடையாது என்கின்றனர். அப்படியானால் நாம் உயிர் வாழ்வதற்கு அத்தியாவசியமான பிராணவாயுவையும் நமக்கு கூரையாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் ஓஸோன் வாயு மண்டலத்தையும் இந்த பரந்த ஆகாய வெற்றுவெளியில் சிதறுண்டு போய்விடாமல் பாதுகாக்கும் சக்தி எது என தேடிய விஞ்ஞானிகளுக்கு புலப்பட்டது தான் பூமியின் காந்த மண்டலம் (Earth’s Magnetosphere).
20-ஆம் நூற்றாண்டில் ஏற்பட்ட அறிவியல் வளர்ச்சியினால் விண்ணில் செலுத்தப்பட்ட தொழில்நுட்பம் வாய்ந்த தொலைநோக்கிகளினாலும், இன்னும் பல அரிய கருவிகளினாலும் ஆராய்ந்ததில், இந்த வாயு மண்டலத்தை, இந்த பிரபஞ்சத்தின் வெற்றுவெளியில் சிதறாமல் காப்பது பூமியின் மேற்பரப்பில் 70,000 கிலோ மீட்டர் வரை பரவியிருக்கும் பூமியின் காந்த மண்டலமே என்று கண்டறிந்தனர். இதை சற்று விளக்கமாகப் பார்ப்போம்.

இந்த பிரபஞ்சம் ஈர்ப்பு விசை மற்றும் காந்த விசைப் போன்ற பல சக்திகளைக் கொண்டுள்ளது.

அல்லாஹ்வும் தன் திருமறையில் கூறுகிறான்:-

“-இன்னும் வானத்தை நாம் பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம் – எனினும் அவர்கள் அவற்றிலுள்ள அத்தாட்சிகளைப் புறக்கணித்து விடுகிறார்கள்” (அல்குர்ஆன்: 21:32)

“மேலும், நாம் வானத்தை (நம்) சக்திகளைக் கொண்டு அமைத்தோம்; நிச்சயமாக நாம் விரிவாற்றல் உடையோராவோம்” (அல்குர்ஆன்:51:47)
சூரியன் அதிவேகத்தில் சுழல்வதால் அதிலிருந்து ஏற்படும் காந்தசக்தி ஆகாய வெளியெங்கிலும் பரவியுள்ளது. சூரியனின் காந்த சக்தி எல்லைக்குள் இருக்கும் பூமியும் அதிவேகத்தில் சுழல்வதனால் பூமியைச் சுற்றிலும் காந்தசக்தி ஏற்படுகிறது. இது பூமியிலிருந்து உயரே செல்ல செல்ல குறைந்து கொண்டே வந்து இறுதியில் ஒரு நிலையான காந்தசக்தியைக் கொண்டிருக்கும். பூமியின் காந்தசக்தியின் எல்லைக்கப்பால் இருப்பது சூரியனின் காந்தசக்தியாகும். சரி இனி இந்த காந்தசக்தி பூமியின் காற்று மண்டலத்தை எவ்வாறு பாதுக்காக்கின்றது எனப் பார்ப்போம்..

காற்று மண்டலத்தில் உள்ள வாயுக்களின் அணுக்கள் சூரியனின் வெப்பக்கதிர்களால் தாக்கப்படுவதோடு அல்லாமல், சூரியனின் ஒளிக்கற்றைகளிலிருந்து மின்சாரத்தையும் பெற்று மின்னூட்டம் பெற்ற அணுக்களாகின்றன. (Electrically Charged Particles) மின்னூட்டம் பெற்ற காற்று மண்டலத்தின் இந்த துகள்களை பூமியின் சக்திவாய்ந்த காந்த மண்டலம் தன்வசம் இழுத்து அவைகள் பரந்து விரிந்த ஆகாய வெற்றுவெளியை நோக்கிச் சென்று சிதறுண்டு விடாமல் பாதுகாத்துக் கொள்கிறது





மேலும் சூரியனிலிருந்து பூமியை நோக்கி தொடர்ந்து பாய்ந்துக் கொண்டிருக்கும் அழிவுக் கதிர்களையும், அவ்வப்போது சூரியனிலிருந்து வீசும் சூரியப் புயலின் வேகத்தையும் பூமியின் காந்த மண்டலம் தடுத்துக் கொண்டு ஒரு கூரையாக செயல்படுகிறது. (பார்க்கவும் வீடியோ: http://www.youtube.com/watch?v=c-RM-DCJ6K0&feature=player_embedded#!) 

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி சிந்தித்துப் பாருங்கள்:-

“இன்னும் வானத்தை பாதுகாக்கப்பட்ட கூரையாக ஆக்கினோம்”

என்று கூறி நம்மை பாதுகாக்கும் இறைவன் மிகவும் கருனையாளன் அன்றோ?



விண்கற்களினால் பூமிக்கு ஆபத்து!: -

அல்குர்ஆன் 21:32 வசனத்தில் பொதிந்துள்ள மற்றுமொரு சான்றினைப் பார்ப்போம்.

இந்த சூரியக்குடும்பம் உருவான காலகட்டத்தில் அவை மிகப்பெரிய நட்சத்திரம் (Parent Star) ஒன்றிலிருந்து தோன்றியது என வானவியல் வல்லுனர்கள் கூறுகிறார்கள். அப்போது சூரியன் மற்றும் அதைச் சுற்றிவரும் கோள்களுடன் கோடிக்கணக்கான விண்கற்களும் தோன்றின. அக்கற்களும் சூரியனின் ஈர்ப்புச்சக்திக்கு உட்பட்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. அவைகளில் சிறியதும் பெரியதுமாக சில மில்லி மீட்டர் முதல் பல கிலோ மீட்டர் விட்டமுடைய கற்கள் இருக்கின்றன. இவைகளில் பெரிதாக இருக்கும் கற்களுக்கு (Asteroids) ஆஸ்டெராயிட்ஸ் என்றும், சிறிய கற்களை (Meteoroids) மீட்டியராய்ட்ஸ் என்றும் அழைக்கிறார்கள். இவைகள் ஒரு பெரும் கூட்டமாக செவ்வாய் கிரகத்திற்கும், ஜுபிடர் என்ற கிரகத்திற்கும் இடையில் ஒரு பெல்ட்டைப்போல இருந்து கொண்டு சூரியனைச் சுற்றி வருகின்றன. இதற்கு ‘ஆஸ்ராயிட்ஸ் பெல்ட்’ என்று பெயரிட்டிருக்கிறார்கள். சில நேரங்களில் இவைகளிலிருந்து சில கற்கள் விலகிச் செல்கின்றன. இவ்வாறு விலகிச் செல்லும் இக்கற்களை பூமியானது தன்னுடைய ஈர்ப்பாற்றலால் தன் வசம் இழுப்பதால் அக்கற்கள் பூமியை நோக்கி மிக வேகமாக வருகின்றன.

மேலும் வால்நட்சத்திரம் என்று சொல்லப்படக்கூடிய Comets சென்ற பாதைகளில் ஏராளமான சிறுசிறு கற்கள் கோடிக்கணக்கில் காணப்படுகிறது. பூமி சுழன்று கொண்டே வால்நட்சத்திரம் கடந்து சென்ற பாதைகளில் நகரும்போது அப்பாதைகளில் உள்ள கோடிக்கணக்கான துகள்களும், கற்களும் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு ஷவரிலிருந்து கொட்டும் நீரைப்போல பூமியை நோக்கிக் கொட்டுகிறது. இதற்கு ஆங்கிலத்தில் மீட்டியர் ஷவர் என்று (Meteor Shower) கூறுவர்.

இவ்வாறு பல வகைகளில் பூமியை நோக்கி பல கோடிக்கணக்கான கற்கள் விழுந்தவண்ணம் இருக்கின்றன. ஒரு ஆண்டிற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியை நோக்கி வருவதாக கணக்கிட்டுள்ளனர். வானத்திலிருந்து கொட்டப்படும் கோடிக்கணக்கான கற்களில் ஒன்றுகூட நம்மீது விழவில்லையே? அவற்றை நம்மீது விழாமல் தடுப்பது எது? என்று ஆச்சரியத்தோடு வினா எழுப்பினால் அதற்கும் விடை தருகிறார்கள் விஞ்ஞானிகள். பூமியைச் சுற்றியுள்ள வளிமண்டலமே கூரையாக அமைந்து அக்கற்கள் நம்மீது விழாமல் தடுத்துக் கொண்டிருக்கிறது.

எப்படி என்கிறீர்களா?

தன் பாதையிலிருந்து விலகிய கற்கள் பூமியின் ஈர்ப்பாற்றலினால் இழுக்கப்பட்டு மிக அதிக வேகத்தில் பூமியை நோக்கிப் பாய்ந்தோடி வரும்போது அவைகள் பூமியின் காற்று மண்டலத்தை கடந்து வரவேண்டியதிருக்கிறது. அதிவேகமாக வரும் கற்கள் காற்று மண்டலத்தில் உராயும்போது ஏற்படும் அளவுக்கதிகமான வெப்பத்தினால் அக்கற்கள் தீப்பிடித்து எரிந்து சாம்பலாகி விடுகின்றன. ஒரு சில கற்களே பாதி எரிந்தும் பாதி எரியாத நிலையிலும் பூமியை வந்தடைகின்றன. இவ்வாறு பூமியில் விழும் கற்கள் விண்வெளி ஆராய்ச்சியாளர்களுக்கு அவர்களின் ஆய்விற்கு பெரிதும் உதவுகின்றன. இப்போது நினைத்துப் பாருங்கள். வருடத்திற்கு 215,000 டன் எடையுள்ள கற்கள் பூமியின் மீது பாய்ந்தோடி வந்து கொண்டிருக்கும் நிலையில் அவைகளிலிருந்து இறைவன் நம்மைக் காப்பதற்காகவும் வளிமண்டலம் எனும் வானத்தை கூரையாக படைத்திருக்கின்றான். மேலும் இறைவன் கூறுகிறான்.

“மேலும், வானங்களையும் பூமியையும் இவ்விரண்டிற்கும் இடையே உள்ளவற்றையும் விளையாட்டிற்காக நாம் படைக்கவில்லை” (அல்குர்ஆன்: 44:38)

அல்லாஹ்வே முற்றிலும் அறிந்தவன்.

0 comments:

Post a Comment

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More

 
OUR USEFUL WEBSITE'S 1000technews | FOR MECHANICAL worldmechpro - CONTECT US | ABOUT MADUKKUR